தொடரும் இழுபறி: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ம.தி.மு.க. அதிருப்தி


தொடரும் இழுபறி: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ம.தி.மு.க. அதிருப்தி
x
தினத்தந்தி 5 March 2021 4:09 AM GMT (Updated: 5 March 2021 4:09 AM GMT)

தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ம.தி.மு.க.வுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க.வின் நிலைப்பாட்டை ஏற்கமுடியவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

சென்னை, 

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க.வை பேச்சுவார்த்தைக்கு வருமாறு கடந்த 2-ந்தேதி தி.மு.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆலோசனையின்பேரில் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினர் இரட்டை இலக்க தொகுதிகள் பட்டியலை எடுத்துக்கொண்டு அன்றைய தினம் மாலை அண்ணா அறிவாலயம் சென்றனர். டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினரிடம் அந்த பட்டியலை வழங்கினர்.

இதை படித்து பார்த்த தி.மு.க. குழுவினர், இந்த முறை கூட்டணியில் அதிகம் கட்சிகள் இருப்பதால் உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியாது. ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதிகள் ஒதுக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். இதனால், முதல் சுற்று பேச்சுவார்த்தை ம.தி.மு.க.வுக்கு மனக்கசப்பாக அமைந்தது. தி.மு.க. தரப்பில் முன்வைக்கப் பட்ட கருத்துகளை வைகோவிடம் தெரிவித்தனர்.

ம.தி.மு.க.வினருக்கு அதிருப்தி

இந்த நிலையில், வைகோ ம.தி.மு.க. நிர்வாகிகளுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். அதன்படி, ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம் நாளை (சனிக்கிழமை) எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தநிலையில், தி.மு.க. தரப்பில் இருந்து மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில், தங்கள் விருப்பம் நிறைவேற்றப்படும் என்ற மனநிலையில் ம.தி.மு.க. குழுவினர் மாலை 5.50 மணியளவில் அண்ணா அறிவாலயம் வந்தனர். தி.மு.க. குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை 20 நிமிடங்களில் முடிவடைந்தது.

தி.மு.க. தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால், 2-ம் சுற்று பேச்சுவார்த்தையும் ம.தி.மு.க.வினருக்கு அதிருப்தியாக அமைந்தது. இதனை ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா நிருபர்களிடம் பேட்டி அளிக்கும் போது உணர முடிந்தது. அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஏற்றுக்கொள்ள முடியாத சூழல்

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ம.தி.மு.க. சார்பில் ஒரு எண்ணிக்கையை கடந்த சந்திப்பின்போது தி.மு.க.விடம் தெரிவித்திருந்தோம். இன்று (நேற்று) நடந்த பேச்சுவார்த்தையில், கடந்த முறை எந்த நிலையில் இருந்தார்களோ, அதே நிலையில்தான் இப்போதும் இருக்கிறார்கள். அதனை ஏற்றுக்கொள்ள முடியாத சூழலில் ம.தி.மு.க. இருக்கிறது.

இதுகுறித்து பொதுச்செயலாளர் வைகோவிடம் எடுத்துச்சொல்வோம். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை முடிவை தி.மு.க. தான் எடுக்க வேண்டும்.

கொள்கை சார்ந்து நிற்கிற ம.தி.மு.க., தி.மு.க.வுடன் இணைந்து என்கிற சிந்தனை ஓட்டத்துடன் தான் இருக்கிறோம். ஆனால், நடைபெற உள்ள தேர்தலில் ம.தி.மு.க. கும்மிடிப்பூண்டியில் இருந்து கன்னியாகுமரி வரை பறந்து விரிந்திருக்கிற ஒரு இயக்கம். அந்த இயக்கத்துக்கானஅங்கீகாரத்தை தந்திடுங்கள் என்ற வேண்டுகோளை தான் தி.மு.க.விடம் வைத்திருக்கிறோம். அதனை பரிசீலிப்பதாக சொல்லி இருக்கிறார்கள். எங்கள் தோழர்களோடு சட்டமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்பது தான், ம.தி.மு.க.வின் இலக்காக இருக்கிறது. அதுதான் வைகோவின் எண்ணம். அதை நோக்கி தான் ம.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்துகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story