“குமரியை முதல் மாவட்டமாக உயர்த்துவேன்” - பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் உறுதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 6 March 2021 11:11 AM GMT (Updated: 6 March 2021 11:11 AM GMT)

குமரியை முதல் மாவட்டமாக உயர்த்துவேன் என்று பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் உறுதியளித்துள்ளார்.

நாகர்கோவில், 

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குமரியை முதல் மாவட்டமாக உயர்த்துவேன் என்று பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் உறுதியளித்துள்ளார். 

இதுதொடர்பாக நாகர்கோவிலில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “கட்சியின் தலைமை என் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை எனக்கு அளித்ததிற்கு நன்றி. அமைச்சராக பதவி வகித்தபோது நான் எப்படி செயல்பட்டேன் என்பது பொது மக்களுக்கு நன்றாக தெரியும். எனவே இந்தமுறை மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை பொதுமக்கள் எனக்கு அளிப்பார்கள். நான் கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்தபோது, பணிகள் பாதியில் நின்று போகக் கூடாது என்பதற்காக அப்போதைய எம்.பி. வசந்தகுமாருக்கு முழு ஒத்துழைப்பை அளித்தேன். 

இந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதும் நான் முன்னெடுத்த அனைத்து பணிகளும் முடிக்கப்படும். பொதுமக்களுக்கு விருப்பம் இல்லாத எந்த திட்டத்தையும் கொண்டுவரப்போவதில்லை. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவேன். குமரியை முதல் மாவட்டமாக உயர்த்துவேன்” என்று அவர் தெரிவித்தார்.

Next Story