தொகுதி பங்கீட்டில் தி.மு.க-காங்கிரஸ் இடையே உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து


தொகுதி பங்கீட்டில் தி.மு.க-காங்கிரஸ் இடையே உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து
x
தினத்தந்தி 6 March 2021 10:45 PM GMT (Updated: 6 March 2021 10:45 PM GMT)

தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு 6 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தி.மு.க-காங்கிரஸ் இடையே நேற்று இரவில் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்து ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. கூட்டணி
இதையொட்டி கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தி.மு.க. விரைவுபடுத்தியுள்ளது. தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு தலா 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்தநிலையில் நேற்று மாலை ம.தி.மு.க.வுடன் தி.மு.க. தொகுதி பங்கீடு உடன்பாடு கண்டது. ம.தி.மு.க.வுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 8 இடங்களை கேட்டதால் முடிவு எட்டப்படவில்லை. காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது.

நள்ளிரவில் வந்த அழைப்பு
தி.மு.க. தரப்பு குறைவான தொகுதிகளை ஒதுக்க முன்வந்ததால், தொகுதி பங்கீடு தொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி அவசரமாக செயற்குழு கூட்டத்தை கூட்டியது. இந்த கூட்டத்தில் நிர்வாகிகளிடம் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து கேட்டார். இந்த நேரத்தில்தான் காங்கிரஸ், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து போட்டியிடும் என்ற யூகமும் காற்றில் பரவ தொடங்கியது.

இதற்கிடையே, தி.மு.க.வுடன் நடத்தப்பட்டு வந்த பேச்சுவார்த்தை விவரங்களை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் என்ன முடிவு எடுக்க போகிறது என்று அரசியல் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த வருமாறு காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க. தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

உடன்பாடு
இதனை ஏற்று காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு சென்றனர்.இந்த சந்திப்பின்போது தி.மு.க-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.

இன்று கையெழுத்தாகிறது

இது குறித்து தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

மேலிட தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து விட்டு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்களை சந்தித்து பேசினோம். நாங்கள் ஒரு உடன்பாட்டிற்கு வந்திருக்கிறோம். இந்த உடன்பாடு நாளை (இன்று) காலை 10 மணிக்கு கையெழுத்தாகும். எத்தனை இடங்கள் என்பது நாளை (இன்று) காலை உங்களுக்கு தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன் மூலம் தி.மு.க-காங்கிரஸ் தொகுதி உடன்பாட்டின் மூலம் பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Next Story