மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில்: நடிகர் செந்தில் பா.ஜ.க.வில் இணைந்தார்


மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில்: நடிகர் செந்தில் பா.ஜ.க.வில் இணைந்தார்
x
தினத்தந்தி 12 March 2021 12:06 AM GMT (Updated: 12 March 2021 12:06 AM GMT)

சென்னையில் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் நடிகர் செந்தில் தன்னை பா.ஜ.க.வில் நேற்று இணைத்துக்கொண்டார்.

சென்னை, 

அ.தி.மு.க.வில் இணைந்து செயல்பட்டு வந்த நடிகர் செந்தில் கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களின் போது தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமையிடமான கமலாலயத்திற்கு நேற்று காலை வருகை தந்த நடிகர் செந்தில், பா.ஜ.க. மாநிலத்தலைவர் எல்.முருகன் மற்றும் அகில இந்திய பா.ஜ.க. பொதுச்செயலாளர் மற்றும் தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளருமான சி.டி.ரவி ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க.வில் தன்னை நேற்று இணைத்து கொண்டார். மாநில தலைவர் எல்.முருகன், அவருக்கு உறுப்பினர் அட்டையை வழங்கி வரவேற்றார்.

மனப்பூர்வமாக வரவேற்கிறேன்

பின்னர் மாநில தலைவர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுமக்கள் நலன் கருதி பிரதமர் கொண்டு வரும் நல்ல திட்டங்களை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு துறைகளில் இருந்தும் பிரபலமானவர்கள் பா.ஜ.க.வில் இணைந்து வருகிறார்கள். அந்தவகையில் தற்போது தமிழ் சினிமா உலகில் காமொடி நடிகராக பல ஆண்டுகள் வலம் வந்த நடிகர் செந்தில் தன்னை பா.ஜ.க.வில் இணைத்து உள்ளார். அவரை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். வேட்பாளர் பட்டியலை தேசிய தலைமை விரைவில் வெளியிடும். தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைமை சொல்வதை செய்வேன்

பின்னர் நடிகர் செந்தில், நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்கள் நலன் கருதி மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் செயல்படும் பா.ஜ.க. அரசு பல்வேறு நல்ல திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருவதால் தற்போது பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன். அ.தி.மு.க.வில் இருந்து ஏன் பா.ஜ.க.வில் இணைந்துள்ளீர்கள் என்று கேட்கிறீர்கள். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலதா உயிரோடு இருந்த வரை அ.தி.மு.க.வில் இருந்து வந்தேன். இப்போது அ.தி.மு.க.வில் இருப்பவர்களை எனக்கு பிடிக்கவில்லை. இதனால் அ.தி. மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.விற்கு வந்துள்ளேன்.

சட்டசபை தேர்தலில் நூறு சதவீதம் பிரசாரத்தில் ஈடுபடுவேன். ஆனால் அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்வீர்களா என்ற கேள்விக்கு தலைமை என்ன சொல்கிறதோ அதைச்செய்வேன் என தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியின் போது மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story