பெரம்பலூர், தஞ்சாவூர் தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு


பெரம்பலூர், தஞ்சாவூர் தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 March 2021 1:14 AM GMT (Updated: 12 March 2021 1:14 AM GMT)

பெரம்பலூர், தஞ்சாவூர் தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.

சென்னை, 

அ.தி.மு.க. கூட்டணியில் பெரம்பலூர் (தனி), தஞ்சை, பத்மநாபபுரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் பெரம்பலூர் (தனி) தொகுதிக்கு பெரம்பலூர் மாவட்ட மாணவரணி செயலாளர் இளம்பை ஆர்.தமிழ்செல்வன், தஞ்சாவூர் தொகுதிக்கு கரந்தை பகுதி செயலாளர் வி.அறிவுடைநம்பி ஆகியோர் வேட்பாளர்களாக அ.தி.மு.க. தலைமை நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதேவேளை ஜி.கே.வாசன் தலைமையிலான த.மா.கா.வுக்கு 6 தொகுதிகள் வழங்கப்பட்டது. 6-ல் ஒன்றாக இடம்பெற்றிருந்த லால்குடி தொகுதிக்கு, ஏற்கனவே அ.தி.மு.க. வேட்பாளராக ராஜாராம் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் லால்குடி த.மா.கா.வுக்கு வழங்கப்பட்ட நிலையில், அத்தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர் வாபஸ் பெறப்படுகிறார் என்றும் அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

தற்போதைய சூழலில் அ.தி.மு.க. 178 தொகுதிகளிலும், பா.ம.க. 23 தொகுதிகளும், பா.ஜ.க. 20 தொகுதிகளிலும், த.மா.கா. 6 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. அதேபோல பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், பசும்பொன் தேசிய கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதி என 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதன்மூலம் தற்போது 233 தொகுதிகள் முடிவு பெற்றுள்ளன.

பத்மநாபபுரம் தொகுதி மட்டும் இன்னும் யாருக்கும் ஒதுக்கப்படாமல் இருக்கிறது.

Next Story