அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது வழக்கு
அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம் ஊத்துப்பட்டி விலக்கு பகுதியில் நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் மாரிமுத்து, சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக கோவில்பட்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ கட்சி நிர்வாகிகளுடன் காரில் வந்தார். அந்த காரை தேர்தல் பறக்கும் படையினர் வழிமறித்து சோதனை செய்தனர்.
இதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் பறக்கும் படையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அரசு ஊழியரை 10 நாட்களில் இடமாற்றம் செய்து விடுவதாக கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சர் மீது வழக்கு
இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் மாரிமுத்து, நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில், இந்திய தண்டனை சட்டம் 353 (அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்), 506 (1) (மிரட்டல் விடுத்தல்) ஆகிய பிரிவுகளில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story