வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்: ரூ.34 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலைகள் முடக்கம்


வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்: ரூ.34 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலைகள் முடக்கம்
x
தினத்தந்தி 16 March 2021 8:55 PM GMT (Updated: 16 March 2021 8:55 PM GMT)

வங்கி ஊழியர்களின் 2 நாள் போராட்டத்தால் சுமார் ரூ.34 ஆயிரம் கோடி மதிப்பிலான 4 கோடி காசோலைகள் முடங்கி உள்ளன.

சென்னை, 

பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய பட்ஜெட் அறிவிப்பைக் கண்டித்து வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்கள் சார்பில் 2 நாள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, நேற்று முன்தினம் தொடங்கிய வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் சுமார் 16 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் முடங்கின.

இந்த நிலையில், நேற்று 2-வது நாள் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி, சென்னையில் உள்ள வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா வளாகத்தில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசுக்கு எதிராக கோஷம்

ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் தலைமை தாங்கினார். வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் தமிழ்நாடு கிளை அமைப்பாளர் கிருபாகரன், இந்திய வங்கி ஊழியர் சம்மேளன செயலாளர் க.கிருஷ்ணன், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளனத்தின் தமிழக செயலாளர் நல்லபெருமாள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ரூ.142 லட்சம் கோடி புழக்கம்

ஆர்ப்பாட்டத்தின்போது வெங்கடாச்சலம் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுமக்களின் சேமிப்பு ரூ.142 லட்சம் கோடி, வங்கிகளில் புழங்கி வருகிறது. அதற்கு பாதுகாப்பு வங்கிகள்தான். எனவே, வங்கிகளை தனியார்மயமாக்கக் கூடாது.

வளர்ந்துவரும் இந்திய பொருளாதாரத்துக்கு பொதுத்துறை வங்கிகளே உதவுகின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு கைகொடுப்பது பொதுத்துறை வங்கிகள்தான். அவையே கிராமப்புறங்களில் அதிக அளவில் கிளைகளைத் திறந்து மக்களுக்கு சேவை வழங்குகின்றன.

‘ஜன் தன் யோஜனா' திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வங்கிச்சேவை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு சொல்லும் நிலையில், வங்கிகளை தனியார்மயமாக்கினால் அது எப்படி சாத்தியம்? எனவே தனியார்மயமாக்கலை எதிர்க்கிறோம்.

ரூ.34 ஆயிரம் கோடி

வங்கிகளுக்கான ஒரே பிரச்சினை, வராக்கடன்தான். அதனை வசூலிக்கும் கடமை அரசாங்கத்துக்கு இருக்கிறது. வராக்கடனை வசூலிப்பதற்கு உதவி செய்ய வேண்டும், அதற்காக சட்டங்களை திருத்த வேண்டும். ஆனால், மத்திய அரசு வராக்கடன்களை ரத்து செய்து அறிவிப்புகளை வெளியிடுவதுடன், வங்கிகளையும் தனியாரிடம் ஒப்படைக்கப் பார்க்கிறார்கள்.

வங்கிகள் தனியார்மயமாகும்பட்சத்தில், அனைத்து வகையிலும் பாதிப்பு ஏற்படும். எனவே, வங்கிகள் தனியார்மயமாக்குதல் முடிவை கைவிட வேண்டும்.

போராட்டம் நடைபெற்றுள்ள 2 நாட்களிலும் சுமார் 34 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 4 கோடி காசோலைகள் பரிவர்த்தனை ஆகாமல் முடங்கி இருக்கின்றன. இதற்கு காரணம் அரசாங்கம்தான். அடுத்தகட்ட போராட்டம் குறித்து வங்கி ஊழியர் சங்கங்கள் கூட்டமைப்பின் தலைமைக்குழு ஆலோசனை நடத்தி முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தின் 2-வது நாளான நேற்றும் ஏராளமான வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பணிகளை முடிக்க முடியாமல் அவதி அடைந்தனர். 

Next Story