அப்பல்லோ மருத்துவமனையில் ஒரே நாளில் 4 ‘மிட்ராகிளிப்’ மருத்துவ சிகிச்சை இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சாய் சதீஷ் சாதனை


அப்பல்லோ மருத்துவமனையில் ஒரே நாளில் 4 ‘மிட்ராகிளிப்’ மருத்துவ சிகிச்சை இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சாய் சதீஷ் சாதனை
x
தினத்தந்தி 17 March 2021 12:00 AM GMT (Updated: 17 March 2021 12:00 AM GMT)

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், ஆசியாவில் முதல் முறையாக ஒரே நாளில் 4 ‘மிட்ராகிளிப்’ மருத்துவ சிகிச்சையை இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சாய் சதீஷ் சாதனை படைத்துள்ளார்.

சென்னை, 

மனித உடலில் ரத்த ஓட்டங்கள் சீராக இருப்பதில் இதயம் மிக பெரிய பங்கு வகிக்கின்றன. இந்த இதயத்தில் உள்ள மிட்ரல் வால்வு வழியாக செல்லும் ரத்தம் கசியாமல் இருக்க ரத்தம் வெளியேறிய பின்னர் மிட்ரல் வால்வு தானாக மூடிக்கொள்ளும். இவ்வாறு மூடும்போது ஏற்படும் இடைவெளியை சரி செய்ய ‘மிட்ராகிளிப்’ எனும் அதிநவீன சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த 2003-ம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த சிகிச்சை தற்போது உலகில் மிகவும் பிரபலமாகி வருகிறது. தமிழகத்தில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இந்த சிகிச்சை கடந்த 2 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த அதிநவீன சிகிச்சையை இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சாய் சதீஷ் மேற்கொண்டு வருகிறார்.

ஒரே நாளில் 4 முறை

முதியவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது சிக்கலான காரியம் என்பதால், இந்த சிகிச்சை தற்போதுபெரிதும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் ஆசியாவிலேயே முதல் முறையாக ஒரே நாளில் அடுத்தடுத்து 4 ‘மிட்ராகிளிப்’ மருத்துவ சிகிச்சையை அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் சாய் சதீஷ் செய்துள்ளார். இந்த சிகிச்சை குறித்து அவர் கூறியதாவது:-

மிட்ரல் வால்வில் ஏற்படும் கசிவை அறுவை சிகிச்சை இல்லாமல், சிறிய துளையிட்டு அந்த கசிவை அடைக்க ‘மிட்ராகிளிப்’ மூலம் நவீன சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சை இல்லாததால், மிக சிறிய அளவில் உள்ள இந்த ‘மிட்ராகிளிப்பை’ வெறும் கேமரா உதவியுடன் செலுத்துவது மிகவும் சவாலான காரியம்.

21 பேருக்கு மட்டும்...

இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் 21 பேருக்கு மட்டுமே இந்த ‘மிட்ராகிளிப்’ மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இதில் அப்பல்லோ மருத்துவமனையில் 13 பேருக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இருவருக்கு மட்டுமே சிகிச்சை செய்ய திட்டமிட்டிருந்தோம். இந்த நிலையில் மற்ற இரண்டு நோயாளிகளும் தொடர்ந்து முடங்கிப்போக, அடுத்தடுத்து 4 பேருக்கு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆழ்ந்த அனுபவமிக்க அறுவை சிகிச்சை குழுவினரின் கூட்டு முயற்சியால் இதை வெற்றிகரமாக செய்து முடிக்க முடிந்தது. தற்போது சிகிச்சை பெற்ற 4 பேரும் மிகவும் நலமுடன் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரே நாளில் 4 ‘மிட்ராகிளிப்’ மருத்துவ சிகிச்சை செய்த டாக்டர் சாய் சதீஷ் மற்றும் குழுவினரை, அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, துணை தலைவர் டாக்டர் பிரித்தா ரெட்டி, நிர்வாக இயக்குனர் சுனீதா ரெட்டி ஆகியோர் பாராட்டினர்.

Next Story