கொரோனா தொற்று அதிகரிப்பு: அனைத்து ரெயில்களையும் இயக்க உத்தரவிட முடியாது ஐகோர்ட்டு திட்டவட்டம்


கொரோனா தொற்று அதிகரிப்பு: அனைத்து ரெயில்களையும் இயக்க உத்தரவிட முடியாது ஐகோர்ட்டு திட்டவட்டம்
x
தினத்தந்தி 17 March 2021 12:59 AM GMT (Updated: 17 March 2021 12:59 AM GMT)

கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அனைத்து ரெயில்களையும் இயக்க உத்தரவிட முடியாது என சென்னை ஐகோர்ட்டு திட்டவட்டமாக கூறியுள்ளது.

சென்னை, 

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. விமானம், ரெயில், பஸ் போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டன. கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து, பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ரெயில் சேவை முழுமையாக தொடங்கப்படவில்லை. இந்நிலையில், அனைத்து ரெயில்கள், புறநகர் ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிடக்கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இயக்கப்படவில்லை

அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:-

தற்போது 65 சதவீத ரெயில்கள் இயக்கத்தில் உள்ளன. ஆனால் அனைத்து ரெயில்களும் எப்போது இயக்கப்படும் என்ற அறிவிப்பை ரெயில்வே துறை வெளியிடவில்லை. படிப்படியாக எண்ணிக்கையை உயர்த்தி மீண்டும் முழுமையாக ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. விமான போக்குவரத்து 100 சதவீதமும், 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளும் செயல்படுகின்றன. பஸ்களும் 100 சதவீதம் இயக்கப்படுகின்றன. இன்னும் ரெயில்கள் மட்டும் முழுமையாக இயக்கப்படவில்லை.

அதிக கட்டணம்

பஸ் கட்டணங்களை ஒப்பிடும்போது, ரெயில் கட்டணங்கள் குறைவு. ரெயில்கள் முழுமையாக இயக்கப்படாததால், நடுத்தர வர்க்கத்தினர் அதிக கட்டணம் செலுத்தி பிற போக்குவரத்து வசதிகளை அணுக வேண்டியுள்ளது. தனிமனித விலகல், முக கவசம் அணிவது போன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி ரெயில்களை முழுமையாக இயக்கக் கோரி நான் அனுப்பிய மனுவை ரெயில்வே துறை பரிசீலிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

உத்தரவிட முடியாது

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், ‘கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கூட்டம் கூடுவதை தவிர்க்க இயலாத காரணத்தினால், ரெயில்களை முழுமையாக இயக்க உத்தரவிட முடியாது’ என்று திட்டவட்டமாக கூறினர்.

பின்னர் நீதிபதிகள், ‘நிபுணர்களை கலந்து ஆலோசித்து ரெயில்வே நிர்வாகம் இது சம்பந்தமாக முடிவு எடுத்துக்கொள்ளலாம். தடுப்பூசி போடும் பணிகள் முழுமை அடைந்தபிறகோ அல்லது தொற்று பரவல் குறைந்த பிறகோ மனுதாரர் இதே கோரிக்கையை எழுப்பலாம். தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு கோர்ட்டுகளை முழுமையாக திறக்கும் முடிவை ஐகோர்ட்டு நிர்வாகமும் மாற்றியுள்ளது’ என்றும் கருத்து கூறினர்.

Next Story