தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனு அதிகபட்சமாக கரூரில் 90 பேர் போட்டி


தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனு அதிகபட்சமாக கரூரில் 90 பேர் போட்டி
x
தினத்தந்தி 20 March 2021 1:14 AM GMT (Updated: 20 March 2021 1:14 AM GMT)

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது. தேர்தலில் போட்டியிட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு செய்து உள்ளனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் போட்டியிட 90 பேர் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

சென்னை, 

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில்போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

கடைசி நாள்

வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஏற்கனவே தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டனர். எனவே கடைசி நாளான நேற்று சுயேச்சைகள்தான் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 523 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் 55 மனுக்களும், குறைந்தபட்சமாக பா.ஜ.க. வேட்பாளராக நடிகை குஷ்பு களம் இறங்கி உள்ள ஆயிரம்விளக்கு தொகுதியில் 14 மனுக்களும் தாக்கலாகி உள்ளது.

இதில் ஒரு சில வேட்பாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்புமனுக்களை அளித்திருக்கிறார்கள்.

கரூரில் அதிகபட்சம்

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் நேற்று இரவு 9 மணி நிலவரப்படி 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்து இருப்பதாக தகவல் வெளியானது. ஒருசிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இதன் காரணமாக மொத்தம் 6 ஆயிரத்து 222 வேட்புமனுக்கள் தாக்கலாகி இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆண்கள் சார்பில் 5 ஆயிரத்து 274 மனுக்களும், பெண்கள் சார்பில் 945 மனுக்களும், திருநங்கைகள் சார்பில் 3 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 90 பேர் 97வேட்புமனுக்களை தாக்கல் செய்து உள்ளனர். குறைந்தபட்சமாக ராணிப்பேட்டை செய்யூர் ஆகிய தொகுதிகளில் தலா 8 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

234 தொகுதிகளில் 4 ஆயிரத்து 15 வேட்புமனுக்கள் நேற்று முன்தினம் வரை பெறப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில் கடைசி நாளான நேற்று மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்துக்கு மதியம்3 மணிக்குள் வந்தவர்களுக்கு ‘டோக்கன்' வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் காத்திருந்து வேட்புமனுவை தாக்கல் செய்து சென்றனர். மதியம் 3 மணியை தாண்டி வந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

மனுக்கள் பரிசீலனை

கடைசிநாளில் அதிகமாக சுயேச்சை வேட்பாளர்கள் குவிந்ததால் அவர்களது வேட்புமனு விண்ணப்பம், சொத்துப்பட்டியல் ஆகியவற்றை சரிபார்த்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலக ஊழியர்கள் பம்பரம் போல் சுழன்று பணியாற்றினார்கள். இந்த பணி நள்ளிரவை கடந்தும் நடைபெற்றது. எனவே தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட எத்தனை பேர் மனு அளித்துள்ளனர்? எத்தனை பேர் கூடுதல் மனுக்கள் அளித்துள்ளனர்? என்ற அதிகாரபூர்வ தகவல் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் இன்று நடைபெற உள்ளது.

கால அவகாசம்

வேட்புமனுக்கள் மீதான பரிசீலினைபோது, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைபிடிக்காத மனுக்கள் நிராகரிக்கப்படும். எனவே அந்த வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று முடிந்தவுடன், நிராகரிக்கப்பட்ட பெயர்களை தவிர்த்து ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்கள் பெயர்கள் வரிசைப்படுத்தப்படும்.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்கள் தங்களுக்கு போட்டியிட விரும்பவில்லை என்று கருதினால், அவர்கள் தங்களது மனுவை 22-ந் தேதி மதியம் 3 மணிக்குள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் கால அவகாசம் அளித்துள்ளது.

அதன் பின்னர் வேட்புமனுவை திரும்ப பெற்றுக்கொள்ள முடியாது. எனவே அதன் அடிப்படையில் 22-ந் தேதி மாலையில் தேர்தல் களத்தை சந்திக்க உள்ள வேட்பாளர்கள் பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்படும். அன்றைய தினமே சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணியும் நடைபெறும்.

குலுக்கல் முறையில்...

சுயேச்சைகள் தாங்கள் விரும்பும் 3 சின்னங்களை வேட்புமனுவில் அளித்திருப்பார்கள். எனவே ஒரே சின்னத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட சுயேச்சைகள் கேட்டிருந்தால், குலுக்கல் முறையில் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்கள் புகைப்படம், பெயர், சின்னம் பொருத்தும் பணி முழுவீச்சில் நடைபெறும்.

போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப எத்தனை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்பது தெரியவரும்..

Next Story