குஷ்பு தலைமையில் பா.ஜ.க.வினர் தி.மு.க.வினர் மீது புகார்


குஷ்பு தலைமையில் பா.ஜ.க.வினர் தி.மு.க.வினர் மீது புகார்
x
தினத்தந்தி 21 March 2021 11:25 PM GMT (Updated: 21 March 2021 11:25 PM GMT)

குஷ்பு தலைமையில் பா.ஜ.க.வினர் தி.மு.க.வினர் மீது புகார் போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு.

சென்னை, 

நடிகை குஷ்பு பா.ஜ.க. சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று மாலை குஷ்பு தலைமையில் பா.ஜ.க.வினர் சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர். புகார் மனுவில் பா.ஜ.க.மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கையெழுத்து போட்டிருந்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

தேசிய வாக்காளர் பேரவை என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில், வாக்காளர்களை சந்தித்து, தவறாமல் வாக்களிக்க வேண்டும், என்று நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த தி.மு.க. மற்றும் வி.சி.க.வைச் சேர்ந்த 5 பேர் தேசிய வாக்காளர் பேரவையினரை தாக்கி, தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக கோடம்பாக்கம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டு, வழக்கும் பதிவு செய்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை. அவர்களை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே கருத்தை வலியுறுத்தி கரு.நாகராஜன் நிருபர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார்.

அப்போது குஷ்பு, என்னை வெளிமாநிலத்தை சேர்ந்தவள் என்று பிரசாரம் செய்கிறார்கள். நான் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவள்தான், ஆனால் இந்தியாவில் பிறந்தவள். இந்திய பிரஜை. சென்னையில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கிறேன், தமிழ் மண் மீது எனக்கு உரிமை உள்ளது, என்று தெரிவித்தார். அப்போது பா.ஜ.க. மாநில வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் பால்கனகராஜ், சென்னை மாநகரின் முன்னாள் பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

Next Story