தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் நாளை முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு


தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் நாளை முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
x
தினத்தந்தி 22 March 2021 2:41 PM GMT (Updated: 22 March 2021 2:41 PM GMT)

தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் நாளை முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பரவத் தொடங்கியது. அதையடுத்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தொடர்ந்து நோய்த் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்து வந்ததால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டே இருந்தன.

கொரோனா பாதிப்பு குறைந்தநிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மீதமுள்ள மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கின. இருப்பினும் ஆன்லைன் வகுப்புகளும் சில கல்லூரிகளில் நடந்து வருகின்றன. அதேபோல், 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடந்து வந்தன.

இந்த நிலையில் தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று, தற்போது மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு, பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்று வந்த 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க நேற்று முன்தினம் அரசு உத்தரவு பிறப்பித்தது.

ஏற்கனவே அவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வு, பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது நேரடி வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுத இருக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மறுஉத்தரவு வரும் வரை பள்ளிகளை மூட உத்தரவிட்டதன் தொடர்ச்சியாக, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அடுத்தகட்டமாக என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதன் முடிவில்,  தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் நாளை முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  வாரத்திற்கு 6 நாட்கள் ஆன்லைன் வழியில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என தலைமைச்செயலாளர் அறிவித்துள்ளார். 

Next Story