"நீட் தேர்வுக்கு கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும்" - தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


நீட் தேர்வுக்கு கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும் - தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 23 March 2021 9:30 AM GMT (Updated: 23 March 2021 9:30 AM GMT)

நீட் தேர்வுக்கு கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு கூடுதல் மையங்களை அமைக்கக் கோரி விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் ஏப்.18 அன்று ‘நீட்’ தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 255 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

தமிழகத்தில் 28 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் ஒரு தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பெறத் தொடங்கிய சில மணி நேரங்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்வு மையங்கள் நிரம்பி விட்டதாகக் கூறி, இந்த தேர்வு மையங்கள் ஆன்லைனில் விண்ணப்ப படிவங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்கமார்ச் 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழகத்திலேயே கூடுதல் மையங்களை தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்க வேண்டும்.

தற்போது தமிழக மாணவர்கள் வெளிமாநில மையங்களைத் தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது ‘நீட்’ தேர்வின் போது தமிழக மாணவர்களுக்கு தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்தும். இதனால் தேர்வில் கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்படும். எனவே தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு கூடுதலாக தேர்வு மையங்களை அமைக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூறிய நீதிபதிகள் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு கூடுதல் மையங்களை அமைக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு உத்தரவிட்டனர். மேலும் கூடுதல் தேர்வு மையங்களை அமைப்பதை அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த வேண்டும்.

தமிழகம் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களில் விண்ணப்பிக்கும் மாணவர்கள், அவர்கள் மாநிலத்திலேயே தேர்வு எழுதும் வகையில் கூடுதல் மையங்கள் அமைக்கவேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Next Story