வேகமெடுக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை


வேகமெடுக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் தலைமைச்செயலாளர் ஆலோசனை
x
தினத்தந்தி 24 March 2021 12:54 AM GMT (Updated: 24 March 2021 12:54 AM GMT)

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ வல்லுனர்கள் குழுவுடன் தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

சென்னை, 

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றுக்கு ஆளாபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சும் அளவுக்கு சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சமீபத்தில் தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

மேலும், முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும், ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் அந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

மருத்துவ நிபுணர் குழு

இந்நிலையில், அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் காணொலிக் காட்சி மூலம் மருத்துவ நிபுணர் குழுவினருடன் நேற்று தலைமைச்செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

அந்தக் கூட்டத்தில், ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்.) விஞ்ஞானியும், தேசிய தொற்றுநோய் நிலையத் துணை இயக்குனமான டாக்டர் பிரதீப் கவுர், உலக சுகாதார அமைப்பின் (தமிழ்நாடு) முதுநிலை மண்டல குழு தலைவர் அருண்குமார், ஈரோட்டில் உள்ள இந்திய மருத்துவ கழகத்தின் தலைவர் ராமகிருஷ்ணன், வேலூரில் உள்ள சி.எம்.சி. கல்லூரி இயக்குனர் டாக்டர் ஜெ.வி.பீட்டர் மற்றும் அரசு மருத்துவ குழு நிபுணர்கள் பங்கேற்றனர்.

சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொதுத்துறை சிறப்பு செயலாளர் டி.என்.வெங்கடேஷ், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் டாக்டர் பி.உமாநாத், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தொற்றின் நிலை

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் நிலை பற்றி ஆராயப்பட்டது. எந்தெந்த மாவட்டங்களில் தொற்று அதிகம் உள்ளது, அதைத் தவிர்க்க என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Next Story