‘‘எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராவது உறுதி’’ டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை


‘‘எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராவது உறுதி’’ டாக்டர் ராமதாஸ் நம்பிக்கை
x
தினத்தந்தி 25 March 2021 10:18 PM GMT (Updated: 25 March 2021 10:18 PM GMT)

தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராவது உறுதி என்றும் தேர்தல் பிரசாரத்தின்போது டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

சென்னை, 

அ.தி.மு.க. கூட்டணி சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ஏ.வி.ஏ.கசாலியை ஆதரித்து, பா.ம. க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை சந்திப்பில் நேற்று இரவு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பா.ம.க. துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் காரில் இருந்தபடியே டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்

தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு நல்ல கூட்டணி அமைந்து இருக்கிறது. பொதுமக்களின் நலன் மற்றும் அவர்களது அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் ஒரு போதும் பா.ம.க. சமரசம் செய்து கொண்டது கிடையாது. அந்த வகையில் தொடர்ந்து மக்கள் நலனுக்காக பா.ம.க. குரல் கொடுக்கும்.

அந்த வகையில் தமிழகம் காக்கப்பட அ.தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் அமோக வெற்றியை தர வேண்டும். மக்களின் பேராதரவுடன் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தின் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் வருவது உறுதி. நல்ல மனிதரான அவர் மீது எந்த குற்றச்சாட்டும், எந்த புகாரும் கிடையாது. அதேபோல சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பா.ம.க. வேட்பாளர் கசாலியை ‘மாம்பழம்' சின்னத்தில் மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஒருமுறை அவருக்கு வாய்ப்பு அளித்து பாருங்கள். இந்த தொகுதி இன்னும் வளம் பெறும்.

பா.ம.க. வகுத்துள்ள திட்டங்கள்

ஐரோப்பிய நாடுகளில் அனைத்து நகரங்களிலும் சாலைகளில் நடைமேடைகள் உண்டு. அதேபோல அங்கு பெரும்பாலானோர் சைக்கிள் தான் பயன்படுத்துகிறார்கள். இதனால் அங்கு காற்று மாசுபாடு பெருமளவு தவிர்க்கப்படுகிறது. அதேபோல சென்னையிலும் பெருமளவு காற்று மாசுபாடு தவிர்க்க பா.ம.க. பல திட்டங்களை வைத்திருக்கிறது.

அந்த வகையில் நல்ல பல திட்டங்கள் மூலம் சென்னையை குப்பையில்லா நகரமாக, தூய்மையான, அழகான நகரமாக மாற்றுவதற்கான எல்லா நடவடிக்கைகளிலும் பா.ம.க. முனைந்து நிற்கும். இலவசக் கல்வி, இலவச மருத்துவம், பஸ்களில் பெண்கள், குழந்தைகள் இலவச பயணம் இப்படி எண்ணற்ற திட்டங்களை பா.ம.க. வகுத்து இருக்கிறது.

முககவசம் அணியுங்கள்

எனவே சென்னையின் முக்கியமான பகுதியாக விளங்கும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் ஒரு நல்ல மாற்றத்தை உருவாக்கும் வகையில் பா.ம.க. வேட்பாளரை ஆதரியுங்கள். அ.தி.மு.க. கூட்டணிக்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்து தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி மலர செய்யுங்கள்.

கொரோனா காலகட்டம் என்பதால் அனைவரும் மிக எச்சரிக்கையாக இருங்கள். முக கவசம் அணிந்து நடமாடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story