நெல்லையில் பறக்கும் படை சோதனையில் ரூ.13 கோடி தங்க நகை சிக்கியது வருமானவரி அதிகாரிகள் விசாரணை


நெல்லையில் பறக்கும் படை சோதனையில் ரூ.13 கோடி தங்க நகை சிக்கியது வருமானவரி அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 29 March 2021 10:03 PM GMT (Updated: 29 March 2021 10:03 PM GMT)

நெல்லையில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.13 கோடி மதிப்பிலான தங்க நகைகள் சிக்கியது. இதுதொடர்பாக வருமானவரி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை, 

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சட்டசபை தொகுதிக்கான பறக்கும் படை நிலைக்குழுவினர் நேற்று பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் ரூ.12 கோடியே 89 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.

உடனே, பறக்கும் படையினர் அதுதொடர்பான ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இருந்தன. இருப்பினும் ரூ.13 கோடி மதிப்பிலான நகைகளை கொண்டு வந்ததால் இதுகுறித்து வருமானவரி துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வருமானவரி அதிகாரிகள் விசாரணை

உடனே, வருமானவரித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து வேனில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள், மதுரையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நகைக்கடைகளுக்கு வழங்குவதற்காக நகைகளை கொண்டு செல்வதாகவும், அதற்கு முறையான ஆவணங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் அந்த நகைகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது சரிவர கணக்கிட முடியாததால் அந்த நகைகளோடு வேனை பாளையங்கோட்டை தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு தாசில்தார் செல்வன் மற்றும் பாளையங்கோட்டை சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான கண்ணன் ஆகியோர் அந்த நகைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வருமானவரித்துறையினர் அந்த நகைகளை ஒவ்வொன்றாக பார்த்து மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆவணங்கள் முறையாக இருக்கும் பட்சத்தில் நகைகள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ.1.80 கோடி பறிமுதல்

சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் நேற்று காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் ரூ.1 கோடியே 80 லட்சம் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், கோவையில் உள்ள தனியார் வங்கியில் இருந்து சேலத்தில் உள்ள அந்த வங்கியின் கிளைக்கு பணத்தை கொண்டு வந்தது தெரியவந்தது. ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை. இதனால் ரூ.1 கோடியே 80 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த பணம் சேலம் தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story