தமிழகத்தில் 16 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு


தமிழகத்தில் 16 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு
x
தினத்தந்தி 30 March 2021 11:53 PM GMT (Updated: 30 March 2021 11:53 PM GMT)

தமிழகத்தில் நேற்று 16 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய (செவ்வாய்க்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 82 ஆயிரத்து 666 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 1,404 ஆண்கள், 938 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 342 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளிநாட்டில் இருந்து வந்த இருவரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 8 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 70 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 426 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 874 பேரும், செங்கல்பட்டில் 242 பேரும், கோவையில் 207 பேரும், குறைந்தபட்சமாக அரியலூரில் இருவரும், பெரம்பலூரில் ஒருவரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

16 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 91 லட்சத்து 88 ஆயிரத்து 473 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 8 லட்சத்து 84 ஆயிரத்து 94 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 33 ஆயிரத்து 873 ஆண்களும், 3 லட்சத்து 50 ஆயிரத்து 185 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 36 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 32 ஆயிரத்து 356 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 21 ஆயிரத்து 566 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 9 பேரும், தனியார் மருத்துவமனையில் 7 பேரும் என 16 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் கோவையை சேர்ந்த 23 வயது இளம் பெண்ணும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 4 பேரும், தஞ்சாவூரில் 3 பேரும், செங்கல்பட்டு, கோவை, காஞ்சீபுரத்தில் தலா இருவரும், நாகப்பட்டினம், திருவள்ளூர், திண்டுக்கலில் தலா ஒருவரும் என 8 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரத்து 700 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

1,463 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,463 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 525 பேரும், செங்கல்பட்டில் 124 பேரும், தஞ்சாவூரில் 109 பேரும் அடங்குவர். இதுவரையில் 8 லட்சத்து 56 ஆயிரத்து 548 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 14 ஆயிரத்து 846 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story