‘‘வருமான வரி சோதனைக்கு தி.மு.க. ஒருபோதும் அஞ்சாது’’ கனிமொழி எம்.பி. ஆவேசம்
‘‘வருமான வரி சோதனைக்கு தி.மு.க. ஒருபோதும் அஞ்சாது’’ கனிமொழி எம்.பி. ஆவேசம்.
நெல்லை,
நெல்லை சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணன், பாளையங்கோட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர் அப்துல் வகாப் ஆகியோரை ஆதரித்து நேற்று நெல்லை தாழையூத்து பஜாரில் கனிமொழி எம்.பி. பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் எங்கு சென்றாலும் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. மக்கள் தி.மு.க. கூட்டணிக்கு ஓட்டு போட முடிவு செய்துவிட்டனர். தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுவிடும். நாம் தோற்று விடுவோம் என்ற தோல்வி பயத்தில் பாரதீய ஜனதா அரசு, வருமானவரித்துறையை தங்கள் ஏவல் துறையாக பயன்படுத்திக்கொண்டு தி.மு.க.வினர் மீது சோதனை நடத்தி வருகிறார்கள்.
செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரி துறையினர் சோதனை நடத்தினார்கள். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமானவரி சோதனை நடத்தி வருகிறார்கள். இப்படி வருமானவரி துறையை வைத்து சோதனை நடத்தி தி.மு.க.வை மிரட்டி விடலாம் என்று நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது. தி.மு.க. யாருடைய மிரட்டலுக்கும் பயப்படாது, அஞ்சாது. நீங்கள் இப்படி சோதனை நடத்துவது எங்களுக்கு இன்னும் கூடுதல் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் எங்களுக்கு கூடுதல் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story