எடப்பாடி பழனிசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல் அரிசி வியாபாரியிடம் போலீஸ் தீவிர விசாரணை


எடப்பாடி பழனிசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல் அரிசி வியாபாரியிடம் போலீஸ் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 2 April 2021 10:49 PM GMT (Updated: 2 April 2021 10:49 PM GMT)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக அரிசி வியாபாரியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

சேலம், 

சேலம் லைன்மேடு பகுதியில் உள்ள மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் சேலத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மாவட்ட கலெக்டர் ராமன் ஆகியோரை வெடிகுண்டு வைத்து கொலை செய்வோம் என்று கூறப்பட்டு இருந்தது. மேலும் அந்த கடிதத்தில் சேலம் மல்லூர் அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு முகவரியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த உயர் அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து இந்த மிரட்டல் கடிதம் எழுதியது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த அரிசி வியாபாரியும், அந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு வாடகைக்கு ஆட்களை குடியமர்த்தும் புரோக்கராக செயல்பட்ட ஒருவரையும் போலீசார் பிடித்து விசாரணைக்காக அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

அரிசி வியாபாரியிடம் விசாரணை

பின்னர் அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த கடிதத்தின் கையெழுத்தையும், அவர்களது கையெழுத்தையும் ஒப்பிட்டு பார்த்தனர். இதில் அந்த கடிதத்தை அவர்கள் எழுதவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து நீண்ட நேர விசாரணைக்கு பின்னர் அந்த அரிசி வியாபாரி மற்றும் புரோக்கரை போலீசார் விடுவித்தனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, கடிதத்தில் குறிப்பிட்ட முகவரியில் வசித்து வந்த நபர் ஒருவரை குடியிருப்பு மக்கள் புகார் கூறி காலி செய்ய வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதனால் யாரையாவது சிக்க வைப்பதற்காக இந்த கடிதம் எழுதியிருக்கலாம் என்று கருதுகிறோம். இருந்தாலும் இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

இதனிடையே இந்த மிரட்டல் கடிதம் எதிரொலியாக சேலம் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதன்படி நேற்று முதல்-அமைச்சர் பிரசாரம் செய்த இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

Next Story