வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு


வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை தி.மு.க.வினர் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 April 2021 12:45 AM GMT (Updated: 3 April 2021 12:27 AM GMT)

சென்னையில் உள்ள மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு, அண்ணா நகர், கரூர் தி.மு.க. ேவட்பாளர்கள் வீடுகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழகத்தில் வருமான வரித்துறை சார்பில் ேநற்று திடீர் சோதனை நடந்தது.

சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதனடிப்படையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்பு அறை திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தொடரும் சோதனை

இங்கு வரும் புகார்களின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சோதனையிட்டு ரொக்கம் பறிமுதல் செய்து வருகின்றனர். இதுவரையிலும் 250-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு உள்ளன.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.91 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மு.க.ஸ்டாலின் மகள் வீடு

இந்தநிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு அவருடைய கணவர் சபரீசன் அலுவலகத்தில் நேற்று வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதுபோல அண்ணா நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மோகனின் வீடு, அவருடைய மகனும், சபரீசன் நண்பருமான கார்த்தி மோகனின் அண்ணாநகரில் உள்ள அலுவலகம் மற்றும் கட்டுமான நிறுவன உரிமையாளர் பாலா என்பவரின் வீடு, சேத்துப்பட்டு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை வருமானவரித்துறை சோதனை தொடங்கியது.

இதில், 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.

துணை ராணுவ படை

சோதனை தொடங்கியவுடன் வீட்டில் இருந்து எவரும் வெளியே செல்லவும், வெளியில் இருந்து எவரும் வீட்டுக்கு உள்ளே வரவும் அனுமதிக்கப்படவில்லை. சோதனை நடந்த இடங்களில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு மற்றும் அவருடைய கணவர் சபரீசன் அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடக்கிறது என்ற செய்தி காட்டுத்தீ போல் பரவியது. உடனடியாக ஆர்.எஸ்.பாரதி எம்.பி. மற்றும் சைதாப்பேட்டை தி.மு.க. வேட்பாளர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சபரீசன் வீட்டிற்கு வந்தனர். ஆனால் அவர்களை போலீசார் உள்ளே விட மறுத்து விட்டனர்.

சோதனை நடந்த இடங்களில் எல்லாம் தி.மு.க.வினர் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக அண்ணாநகர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மோகன் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்ய நுழைந்தபோது நான் பிரசாரத்திற்கு செல்ல இருப்பதால் தன்னை வெளியே செல்ல அனுமதிக்கும்படி மோகன் கேட்டுக்கொண்டார். அதனடிப்படையில் மோகனை பிரசாரத்திற்கு செல்ல வருமானவரித்துறையினர் அனுமதித்தனர். ஆனால் அவருடைய மகன் கார்த்திக் மோகனை வெளியே செல்ல வருமானவரித்துறை அனுமதிக்கவில்லை. அதேபோல் அவருடைய மனைவி அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது அவரை உள்ளே விட வருமானவரித் துறையினர் அனுமதிக்கவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு அவரை அனுமதித்தனர். தகவலறிந்ததும் அப்பகுதிக்கு வந்த தி.மு.க.வினர் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் மற்றும் துணை ராணுவத்தினரும் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.

தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை

இதேபோல் கரூர் அருகே ராமேஸ்வரப்பட்டியில் உள்ள, கரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரும், மாவட்ட பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜியின் வீட்டில் காலை 11 மணியளவில் 10-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வீட்டில் இருந்தவர்களை வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல் வெளியாட்கள் யாரும் வீட்டின் உள்ளே செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த சோதனையின்போது செந்தில்பாலாஜியின் வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினரும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அவரது தம்பி அசோக்குமார் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ராயனூரில் உள்ள தி.மு.க. மேற்கு நகர பொறுப்பாளர் தாரணி சரவணன் வீட்டிலும் மற்றும் அதே பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கொங்கு மெஸ் சுப்ரமணி வீட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

வருமானவரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

தஞ்சையில் வாக்காளர்களுக்கு வழங்க பணம் பதுக்கி வைத்து இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தஞ்சை ஒன்றிய தி.மு.க. செயலாளர் முரசொலி என்பவரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஆவணங்கள் பறிமுதல்

இதுகுறித்து, வருமானவரி துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

வருமானவரித் துறையின் கீழ் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார்களின் அடிப்படையில், திருவண்ணாமலை தி.மு.க. வேட்பாளர் எ.வ.வேலு வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கணக்கில் காட்டப்படாத ரூ.3.7 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதே போன்று பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை ரூ.91 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை நீலாங்கரையில் உள்ள மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீடு மற்றும் அவருடைய கணவர் சபரீசன் அலுவலகம், அவரது நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இந்த சோதனையில் ஒரு சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இதைப்போன்று திருவண்ணாமலை எம்.பி. அண்ணாதுரை மற்றும் கரூர் செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ. உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமானவரித்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஆவணம் தொடர்பாக விசாரணை

இந்த ஆவணம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வருமானவரித்துறை சோதனை நிறைவடையாத நிலையில் எவ்வளவு ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தற்போது கூற இயலாது. ஓரிரு நாட்களில் முழு விவரம் தெரியவரும். தொடர்ந்து விசாரண நடந்து வருகிறது. சோதனையும் தொடர வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு வருமானவரித்துறை உயர் அதிகாரிகள் கூறினார்கள்.


Next Story