சென்னை உள்பட 27 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு அனல்காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


சென்னை உள்பட 27 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு அனல்காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 April 2021 8:29 AM GMT (Updated: 3 April 2021 8:29 AM GMT)

சென்னை உள்பட 27 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என சென்னைவானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.





சென்னை:

சென்னையில் இந்தக் கோடைக்காலத்தில் அதிகபட்ச வெப்பம் நேற்று பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட  27 மாவட்டங்களில் நாளை வரை இதே நிலை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு திசையில் இருந்து தமிழகப் பகுதியை நோக்கி தரைக்காற்று வீசுவதால், தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை இயல்பைவிட  வெப்பநிலை உயரக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழக பகுதி நோக்கி வீசுவதால், சென்னை உள்பட 27 மாவட்டங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை அனல் காற்றுடன், இயல்பை விட 6 டிகிரி வரை வெயிலின் தாக்கம் உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி இருக்கிறது. அந்தவகையில் நேற்றும் வெயிலின் தாக்கம் 15 இடங்களில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 110.12 டிகிரி வெயில் பதிவாகியது. 
அதன் விவரம் வருமாறு:-

சென்னை நுங்கம்பாக்கம் - 106.16 டிகிரி (41.2 செல்சியஸ்)

சென்னை மீனம்பாக்கம் - 107.24 டிகிரி (41.8 செல்சியஸ்)

கோவை - 98.06 டிகிரி (36.7 செல்சியஸ்)

கடலூர் - 100.04 டிகிரி (37.8 செல்சியஸ்)

தர்மபுரி - 105.8 டிகிரி (41 செல்சியஸ்)

கன்னியாகுமரி - 90.86 டிகிரி (32.7 செல்சியஸ்)

கரூர் - 105.8 டிகிரி (41 செல்சியஸ்)

கொடைக்கானல் - 71.78 டிகிரி (22.1 செல்சியஸ்)

மதுரை - 105.8 டிகிரி (41 செல்சியஸ்)

மதுரை விமானநிலையம் - 108.14 டிகிரி (42.3 செல்சியஸ்)

நாகப்பட்டினம் - 100.22 டிகிரி (37.9 செல்சியஸ்)

பரங்கிப்பேட்டை - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)

சேலம் - 108.32 டிகிரி (42.4 செல்சியஸ்)

திருச்சி - 108.14 டிகிரி (42.3 செல்சியஸ்)

வேலூர் - 110.12 டிகிரி (43.4 செல்சியஸ்)

திருப்பத்தூர் - 106.88 டிகிரி (41.6 செல்சியஸ்)

ஈரோடு - 108.32 டிகிரி (42.4 செல்சியஸ்)

திருத்தணி - 108.5 டிகிரி (42.5 செல்சியஸ்)

இந்த நிலையில்  சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது:

 ஏப்ரல்7ம் தேதி வரை வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 4ல் இருந்து 6 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும். மேலும் வருகிற ஏப்ரல் 6ம் தேதி அன்று கரூர், தருமபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4ல் இருந்து 5 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும்.

சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, சிவகங்கை, புதுக்கோட்டை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், திருவள்ளுரிலும் வெயில் அதிகரிக்கும் என்று   வெப்பநிலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை, விருதுநகரில் 6 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் உயரும்.

இந்த நிலையில், வெப்பச்சலனத்தால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் வடக்கு அந்தமான் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும். மன்னார் வளைகுடா பகுதியிலும் இன்று 60 கி.மீ.வேகத்தில் சூறாவளி வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story