திருமணம் ஆன 43 நாட்களில் பயங்கரம் புதுப்பெண்ணை கொன்று கணவர் தற்கொலை


திருமணம் ஆன 43 நாட்களில் பயங்கரம் புதுப்பெண்ணை கொன்று கணவர் தற்கொலை
x
தினத்தந்தி 8 April 2021 12:54 AM GMT (Updated: 8 April 2021 12:54 AM GMT)

சேலம் அருகே திருமணம் ஆன 43 நாட்களில் புதுப்பெண்ணை கழுத்தை அறுத்து கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

சேலம், 

சேலம் அருகே வீராணம் கோராத்துப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 33). இவர், வீடுகளுக்கு செட்டாப் பாக்ஸ் மற்றும் ஆண்டனா உள்ளிட்டவை பொருத்தும் பணியை செய்து வந்தார்.

கடந்த 43 நாட்களுக்கு முன்பு கன்னங்குறிச்சியை சேர்ந்த மோனிஷா (19) என்பவரை தங்கராஜ் திருமணம் செய்து கொண்டார்.

கொலை-தற்கொலை

இந்த நிலையில் நேற்று காலை கணவன்-மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரம் அடைந்த தங்கராஜ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மோனிஷாவின் கழுத்தை பிடித்து சரமாரியாக அறுத்துள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் அவர் வீட்டை பூட்டிக்கொண்டு அங்கு இருந்த கேபிள் வயரை எடுத்து கழுத்தில் மாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இந்த நிலையில், வெகுநேரமாகியும் தங்கராஜ் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த உறவினர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு புதுப்பெண் மோனிஷா கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்ததையும், அருகில், தங்கராஜ் தூக்கில் பிணமாக தொங்கியதையும் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நடத்தையில் சந்தேகமா?

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கொன்றுவிட்டு தங்கராஜ் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மோனிஷாவின் அத்தைக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் மோனிஷாவிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்த மோனிஷாவின் பிறந்தநாள் விழாவில் அவர் பங்கேற்றதாக தெரிகிறது. அப்போது, மோனிஷாவுக்கு அவரது அத்தை மகன் கேக் ஊட்டியதாகவும், இதனால் சந்தேகம் அடைந்த தங்கராஜ், தனது மனைவியிடம் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு மனைவியை கொலை செய்துவிட்டு தங்கராஜ் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்த கொடூர சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story