ரெயில்வே பாதுகாப்புப்படையினருக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்


ரெயில்வே பாதுகாப்புப்படையினருக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 8 April 2021 12:57 AM GMT (Updated: 8 April 2021 12:57 AM GMT)

ரெயில்வே பாதுகாப்புப்படையினருக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம் இதுவரை 70 சதவீதம் பேர் போட்டுக்கொண்டனர்.

சென்னை, 

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் மராட்டியம், டெல்லி உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க, தடுப்பூசி உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தெற்கு ரெயில்வேயிலும், ரெயில்வே ஊழியர்கள், பாதுகாப்புப்படை வீரர்கள் என அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகின்றனர். இதுவரை தெற்கு ரெயில்வேயில் 70 சதவீத பாதுகாப்புப்படை வீரர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக தெற்கு ரெயில்வே பாதுகாப்புப்படை டி.ஐ.ஜி சந்தோஷ் சந்திரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ரெயில்வே பாதுகாப்புப்படையில் ஆரம்பத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது பலர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து உள்ளனர். இன்றைய தேதியில் 13 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் தெற்கு ரெயில்வே முழுவதும், 70 சதவீதம் பாதுகாப்புப்படை வீரர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் 100 சதவீதம் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்வார்கள். மேலும், பொதுமக்களும் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல், ‘சென்னை ரெயில்வே கோட்டத்தில் 1,450 ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் உள்ளனர். இதில் 1,180 பேர் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்’ என சென்னை ரெயில்வே கோட்ட மூத்த பாதுகாப்புப்படை கமிஷனர் செந்தில் குமரேசன் தெரிவித்தார்.

Next Story