எனக்கும், கட்சியினருக்கும் இந்த தேர்தல் புதிய அனுபவம்: மண், மொழி, மக்களை காக்க என்றும் களத்தில் நிற்போம் கமல்ஹாசன் அறிக்கை + "||" + This election is a new experience for me and the party: We will stand on the field to protect the soil, language and people, says Kamal Haasan
எனக்கும், கட்சியினருக்கும் இந்த தேர்தல் புதிய அனுபவம்: மண், மொழி, மக்களை காக்க என்றும் களத்தில் நிற்போம் கமல்ஹாசன் அறிக்கை
இந்த தேர்தல் தனக்கும், தன்னுடைய கட்சியினருக்கும் புதிய அனுபவம் என்றும், மண், மொழி, மக்களை காக்க என்றும் களத்தில் நிற்போம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தின் 16-வது சட்டமன்ற தேர்தலில் 72 சதவீதம் வாக்குப்பதிவு நிகழ்ந்திருக்கிறது. கொரோனா பெருந்தொற்று போன்றதொரு அச்சுறுத்தல் தமிழக தேர்தல் வரலாற்றில் இதற்கு முன் இருந்ததில்லை. இந்த இக்கட்டான சூழலிலும் 72 சதவீத வாக்காளர்கள் தங்களது கடமையை ஆற்றியிருப்பது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது.
அரசியலாளர்களின் பொறுப்பை கூட்டுகிறது. தமிழக மக்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள் உரித்தாகட்டும். 100 சதவீத பங்கேற்பே ஜனநாயகம் சென்று சேரவேண்டிய இடம். இனிவரும் தேர்தல்களில் நம்முடைய பங்களிப்பு இன்னும் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதுதான் ஒரு ஜனநாயக நம்பிக்கைவாதியாக என்னுடைய ஆசை.
புதிய அனுபவம்
இந்த தேர்தலில் என்னோடு கைகோர்த்து களம் கண்ட மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள், தோழமை கட்சிகளின் உறுப்பினர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள், சக போட்டியாளர்கள், வாக்காளர்கள், தேர்தல் ஆணையம், ஊடகவியலாளர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தல் என்பது முடிவு அல்ல. மக்கள் பணியில் முடிவு என்பதே கிடையாது.
என்னை பொருத்தவரை இந்த தேர்தல் ஒரு புதிய தொடக்கம். எனது கட்சியினருக்கும் இது புதிய அனுபவம். நிறைய அனுபவங்களை கற்று முன்னகர்ந்திருக்கிறோம். ‘மக்கள் அன்பை விட மகத்தான பலம் இல்லை’ என்பது அதில் முதன்மையானது. தமிழகத்தைச் சீரமைப்போம் என்பது வெறும் தேர்தல் கோஷம் அல்ல. அது ஒரு கூட்டுக்கனவு. அதை நோக்கிய பாதையிலும், பயணத்திலும் சிறிதும் விலகல் இல்லை. மண்ணை, மொழியை, மக்களைக் காக்க இன்று போல் என்றும் களத்தில் நிற்போம்.