சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது சப்-இன்ஸ்பெக்டர் கோரிக்கையை ஏற்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு


சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது சப்-இன்ஸ்பெக்டர் கோரிக்கையை ஏற்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 8 April 2021 3:08 AM GMT (Updated: 8 April 2021 3:08 AM GMT)

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற சப்-இன்ஸ்பெக்டரின் கோரிக்கையை மதுரை ஐகோர்ட்டு ஏற்க மறுத்துவிட்டது.

மதுரை, 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஜூன் மாதம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தாக்கப்பட்டதில் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை சி.பி.ஐ. போலீசார் விசாரித்து, மதுரை மாவட்ட கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

சப்-இன்ஸ்பெக்டர் மனு

இதற்கிடையே இந்த வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனக்கு எதிரான வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடக்கிறது. இந்த வழக்கு தொடர்பான சி.பி.ஐ. ஆவணங்களை கேட்டு தாக்கல் செய்த மனு மாவட்ட கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

வழக்கு தொடர்பான ஆவணங்கள் இதுவரை எனக்கு வழங்கவில்லை. ஆவணங்களை வழங்கினால்தான் வழக்கை என்னால் எதிர்கொள்ள முடியும். இந்த வழக்கில் பொய் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தவறான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளன. இதை நீக்கக்கோரிய மனுவையும் விசாரணை நீதிமன்றம் நிராகரித்தது. எனவே என் மீதான வழக்கு தொடர்பான ஆவணங்களை கேட்ட எனது மனுவை தள்ளுபடி செய்ததையும், பொய் சாட்சியம் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை நீக்க கோரிய மனுக்களை நிராகரித்த உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும். மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்களை என்னிடம் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

கோரிக்கையை ஏற்க மறுப்பு

இந்த வழக்கு நீதிபதி சத்திகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் சம்பந்தப்பட்ட வழக்கின் ஆவணங்களை சி.பி.ஐ. போலீசார் தாக்கல் செய்யும் வரை, கீழ்கோர்ட்டில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதாடினார். ஆனால் நீதிபதி, மனுதாரர் வக்கீலின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.

பின்னர் வழக்கு சம்பந்தமாக சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 20-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Next Story