கொரோனா ஆண்களை அதிகம் தாக்குகிறது; 30 முதல் 39 வயதினரே கொரோனாவால் அதிகளவில் பாதிப்பு; சென்னை மாநகராட்சி தகவல்
சென்னையில் 30 முதல் 39 வயதினரே கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக ஆண்களையே அதிகம் தாக்குகிறது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வேகமெடுக்கும் கொரோனா
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை சென்னையில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 851 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 880 பேர் பூரணமாக குணமடைந்து உள்ளனர். 10 ஆயிரத்து 685 பேர் தற்போது அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 4 ஆயிரத்து 286 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.
ஆண்கள் அதிகம்
சென்னைக்கு இதுவரை வெளிமாநிலங்களில் இருந்து வந்த 24 ஆயிரத்து 684 விமானங்களில் பயணம் செய்த 23 லட்சத்து 77 ஆயிரத்து 375 பயணிகளை பரிசோதித்ததில், 425 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிவந்துள்ளது.சென்னையில் அதிகமாக 30 முதல் 39 வயதினர் 20.14 சதவீதமும், 40 முதல் 49 வயதினர் 18.37 சதவீதமும், 50 முதல் 59 வயதினர் 17.97 சதவீதமும், 20 முதல் 29 வயதினர் 17.93 சதவீதமும், 60 முதல் 69 வயதினர் 11.13 சதவீதமும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
குறைந்தப்பட்சமாக 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 1.60 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 59.71 சதவீதமும், பெண்கள் 40.29 சதவீதம் பேரும் அடங்குவர் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story