வாக்கு எண்ணும் மையங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்


வாக்கு எண்ணும் மையங்களை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும் அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 8 April 2021 5:08 AM GMT (Updated: 8 April 2021 5:08 AM GMT)

‘‘தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களை எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்’’, என அ.தி. மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னை, 

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் ஏழை, எளிய நடுத்தர மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தில் முன்னேற வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு, அ.தி.மு.க. எனும் மாபெரும் மக்கள் பேரியக்கத்தை எம்.ஜி.ஆர். தொடங்கி, பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தி காட்டினார். அதேபோல் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசான ஜெயலலிதா, தனது உடல்நலனையும் பொருட்படுத்தாமல் மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தவவாழ்வு வாழ்ந்து பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க சாதனைகளை நிகழ்த்தினார்.

தி.மு.க. தில்லுமுல்லுகளையும் தாண்டி...

நம் இருபெரும் தலைவர்களின் நல்லாசியோடு ஆட்சி பொறுப்பேற்ற அ.தி.மு.க. அரசு, மக்கள் நலனை முன்வைத்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளது.

அந்தவகையில் அ.தி.மு.க. அரசு தொடர வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த தி.மு.க.வினரின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி 6-ந்தேதி தமிழகத்தில் சுமுகமான வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், முகவர்களுக்கும், அதேபோல கூட்டணி-தோழமை கட்சி தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை பணிவுடன் தெரிவித்து கொள்கிறோம்.

24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்

வாக்குப்பதிவு நிறைவுபெற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் வருகிற மே 2-ந்தேதி வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கட்சி வேட்பாளர்களும், கூட்டணி கட்சி வேட்பாளர்களும், அ.தி.மு.க.-கூட்டணி கட்சி நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்துவிடாமல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு-பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story