தமிழகத்தில் 75 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு இரவு பகலாக கண்காணிக்க ஏற்பாடு


தமிழகத்தில் 75 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு இரவு பகலாக கண்காணிக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 8 April 2021 5:13 AM GMT (Updated: 8 April 2021 5:13 AM GMT)

தமிழக சட்டசபை தேர்தலில் பயன் படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 75 இடங்களில் அமைக்கப் பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப் பட்டுள்ளன.

சென்னை, 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நேற்று முன்தினம் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.

இந்த சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்தலில் 1 லட்சத்து 29 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

75 வாக்கு எண்ணும் மையங்கள்

நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் அதிகபட்சமாக 87.33 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. குறைந்தபட்சமாக வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

வாக்குப்பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வேட்பாளர்கள் முன்னிலையில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. எனவே மொத்த வாக்குப்பதிவு சதவீதத்தில் மிகச்சிறிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். இந்த வாக்குகளை எண்ணும் பணி மே 2-ந்தேதி நடக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 75 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

வாக்குச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் புடை சூழ நேற்று முன்தினம் இரவு வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

சென்னையில் 3 மையங்கள்

அந்த வகையில், சென்னைக்கு உட்பட்ட 16 தொகுதிகளில் ஆர்.கே.நகர், திரு.வி.க. நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 5 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள ராணிமேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கும், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம்விளக்கு, அண்ணா நகர் ஆகிய 6 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கும், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 5 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்துக்கும் கொண்டு வரப்பட்டன. இந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்ட எந்திரங்கள் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் நேற்று காலை ‘ஸ்டிராங் ரூமில்' வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் உள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களும் 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தின் நுழைவு வாயிலில் சட்டம்-ஒழுங்கு போலீசாரும், அதைத்தொடர்ந்து சிறிது தூரத்தில் அதிரடி மற்றும் ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி ஏந்திய போலீசார்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, தமிழக துப்பாக்கி ஏந்திய போலீசார் ஒருவர், வெளிமாநில துப்பாக்கி ஏந்திய போலீசார் ஒருவர், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர் ஒருவர் என வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு தலா 3 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் சுழற்சி முறையில் இரவு பகலாக 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில், கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் ஆலோசனையின் பேரில், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் ஒவ்வொரு மையத்திலும் 500 போலீசார் வீதம் 1,500 போலீசார் 3 ‘ஷிப்ட்’ முறையில் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

கண்காணிப்பு கேமரா வளையம்

மேலும், இந்த 3 வாக்கு எண்ணும் மையங்களும் கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் உள்ளேயும், வெளியேயும் 24 மணிநேரமும் இயங்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் நேரடி காட்சிகள் போலீசார் மற்றும் முகவர்கள் பார்க்கும் வகையில் எல்.இ.டி. டி.வி.கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், வாக்கு எண்ணும் மையங்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாநில தேர்தல் அதிகாரியும் பார்வையிடும் வகையில் கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ந்தேதி வரை இந்த மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு தொடரும்.

வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்களின் முகவர்கள் தங்குவதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது, கொரோனா காலம் என்பதால், முகவர்கள் கும்பலாக கூடாத வகையிலும் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர், போலீஸ் சிறப்பு படையினர், சட்டம்-ஒழுங்கு போலீசார் என சுமார் 25 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை

மேற்குவங்காள மாநிலத்தில் இறுதிகட்ட தேர்தல் வருகிற 29-ந்தேதி முடிவடைகிறது. எனவே அன்று இரவு 7.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அதன்பின்னர் மே 2-ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அதன்பின்னர் முடிவு வெளியாகும்.

Next Story