மதுரையில் ஆந்திரா வங்கி ஊழியருக்கு கொரோனா - 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு


மதுரையில் ஆந்திரா வங்கி ஊழியருக்கு கொரோனா - 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு
x
தினத்தந்தி 8 April 2021 6:55 AM GMT (Updated: 8 April 2021 6:55 AM GMT)

மதுரையில் செயல்பட்டு வரும் ஆந்திரா வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அந்த வங்கிக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரையில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் நேற்றும் மதுரையில் 83 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கடந்த 10 நாட்களில் மட்டும் மதுரையில் மொத்தம் 648 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோல், கடந்த 10 தினங்களில் 203 பேர் மட்டுமே குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 6 பேர் உயரிழந்துள்ளனர்.

இதனையடுத்து தொற்று பரவலை கட்டுப்படுத்த மதுரை மாநகராட்சி சார்பில் பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று முதல் மதுரையில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் மூடப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மதுரையில் உள்ள ஆந்திர வங்கி ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அந்த வங்கிக்கு 3 நாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி முழுவதும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டு, அதன் பிறகே வங்கி திறக்கப்படும் என்றும் அதுவரை வங்கி வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள கிளைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார்.

Next Story