“கொரோனா 2வது அலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” - தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்


“கொரோனா 2வது அலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” - தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 8 April 2021 8:01 AM GMT (Updated: 8 April 2021 8:01 AM GMT)

பொதுமக்களுக்கு கொரோனா 2வது அலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தொண்டர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் பதிவாகியுள்ளது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில், கொரோனா வைரசின் 2வது அலை குறித்து மருத்துவர்களும் மக்கள் நல்வாழ்வுத் துறையும் எச்சரிக்கை செய்திருப்பதால், மீண்டும் ‘ஒன்றிணைவோம் வா’ இயக்கம் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா 2வது அலை குறித்து மருத்துவர்களும், மக்கள் நல்வாழ்வுத் துறையும் எச்சரிக்கை செய்திருப்பதால் அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துங்கள். மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குங்கள். வாய்ப்புள்ள இடங்களில் முகக்கவசம், சானிடைசர் வழங்கிடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கோடை காலத்தில் மக்களின் தாகம் தணிக்க திமுகவின் சார்பில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்றும் தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருக்காமல் மக்களுக்கான பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் எனவும் தொண்டர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Next Story