தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 4,276 பேருக்கு தொற்று உறுதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 8 April 2021 1:23 PM GMT (Updated: 8 April 2021 1:23 PM GMT)

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,276 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தநிலையில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 

கடந்த 2-ந் தேதி முதல் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 3 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் 2-வது அலை உருவாகிறது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 4,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,15,386 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 19 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,840 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மேலும் 1,520 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,59,320 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 1,869 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,72,415ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 30,131 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story