கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கட்டுப்பாடு திருவிழா, மதக்கூட்டங்களுக்கு தடை


கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கட்டுப்பாடு திருவிழா, மதக்கூட்டங்களுக்கு தடை
x
தினத்தந்தி 9 April 2021 4:58 AM GMT (Updated: 9 April 2021 4:58 AM GMT)

கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலியாக தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. திருவிழா, மதக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.

சென்னை, 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை உயர்ந்தபடி இருந்தது.

இதை கட்டுப்படுத்துவதற்காக புதிய கட்டுப்பாடுகளை அரசு நேற்று வெளியிட்டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கட்டுப்பாடுகளுடன் நீட்டிப்பு

கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 2020-ம் ஆண்டு மார்ச் 25-ந் தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

தற்போதுள்ள நோய் பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனாவின் தாக்கம், பக்கத்து மாநிலங்கள் மற்றும் இதர வெளிமாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, கொரோனா தொற்றை தடுப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும், சில கட்டுப்பாடுகளுடனும் இம்மாதம் 30-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதிகரிக்க காரணம் என்ன?

மேலும், நோய்த்தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகள் தொடர்ந்து அமலில் இருக்க ஆணையிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் மராட்டியம், பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, சத்தீஷ்கார் மற்றும் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் சில மாவட்டங்களில் நிகழ்ச்சிகள், விழாக்கள், கூட்டங்கள் போன்ற காரணங்களினாலும் மற்றும் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவதை தவிர்ப்பதாலும், பணியிடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற தவறுவதாலும் சமீப காலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை காணமுடிகிறது.

தொடர் நடவடிக்கை

குறிப்பாக கடந்த மார்ச் 28-ந் தேதியன்று 13 ஆயிரத்து 70 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இம்மாதம் 7-ந் தேதியன்று கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 27 ஆயிரத்து 743 ஆக உயர்ந்துள்ளது.

தலைமைச் செயலாளர் கடந்த 5-ந் தேதியன்று சுகாதாரத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உள்ளிட்ட முக்கியமான துறையின் உயர் அலுவலர்களுடனும், மாவட்ட கலெக்டர்களுடனும் ஆய்வு நடத்தினார். அதன்படி, உரிய தடுப்பு நடவடிக்கைகளை உடனடியாக தீவிரப்படுத்தவும், ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைகளை அதிகப்படுத்தவும், தடுப்பூசி போடுவதை மேலும் விரிவுபடுத்தவும் அறிவுரைகள் வழங்கினார்.

அதையடுத்து தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது நாளொன்றுக்கு 80 ஆயிரம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்படுவதோடு, நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதலாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அறிவுரைகள்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நிலவும் சூழ்நிலையை கண்காணித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் தலைமையில், நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலர், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்ட உயர் அலுவலர்களை உறுப்பினர்களாக கொண்ட குழு ஒன்று அரசால் அமைக்கப்பட்டு, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

அதன் மூலம் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அவ்வப்போது அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் நலன்

கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணியாததாலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் தொடர்ந்து நோய்த்தொற்று அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது.

நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதையும், பொது மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, நோய்த்தொற்றை கட்டுப்படுத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கு முற்றிலுமாக தடை விதிப்பதும், ஒரு சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிப்பதும் அவசியமாகிறது.

புதிய தடைகள்

அதன்படி, மறு உத்தரவு வரும் வரை சில செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது-

* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டு உள்ளதால், இதற்கான தடை தொடரும்.

* தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றிஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

* நோய் பரவலை கருத்தில் கொண்டு திருவிழாக்கள்மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு நாளை (சனிக்கிழமை) முதல் தடை விதிக்கப்படுகிறது.

* நாளை முதல் கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள் மட்டும் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

கட்டுப்பாட்டுடன் அனுமதி

ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட சில செயல்பாடுகளுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நடைமுறைகள் நாளை முதல் அமலுக்கு வரும். நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

* தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள் மற்றும் பொது மக்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்படுவதையும், கை சுத்திகரிப்பான் உபயோகப்படுத்துவதையும், முக கவசம் அணிவதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்து, அனுமதிக்க வேண்டும்.

முக கவசங்கள் அணியாமல் இருப்பவர்களை கட்டாயமாக அனுமதிக்கக்கூடாது. ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படும்.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, மத்திய அரசு அவ்வப்போது வழங்கும் அறிவுரைகளுக்கு ஏற்ப தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிர்வாகம் செய்ய வேண்டும். நிலையான வழிகாட்டு நடைமுறைகளை முறையாக பின்பற்றாத தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பஸ்சில் நின்று செல்ல தடை

* நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பஸ் மற்றும் சென்னையில் இயக்கப்படும் மாநகர பஸ்களில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பஸ்களில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.

* தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடகா செல்லும் பஸ்களில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பஸ்களில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.

* முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி, காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள் அனைத்து ஷோ ரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி) ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டும், இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

சினிமா தியேட்டர்களில்...

* நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 சதவீத இருக்கைகளில் மட்டும், வாடிக்கையாளர்கள் இரவு 11 மணி வரை அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும். மேலும், உணவகங்களில் இரவு 11 மணி வரை பார்சல் சேவை அனுமதிக்கப்படும்.

* கேளிக்கை விடுதிகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொது மக்கள் கூடும் இடங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகத்தில் உள்ள திரையரங்குகள் உள்பட அனைத்து திரையரங்குகளும் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படும்.

வழிபாட்டு தலங்கள்

* நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சமாக 200 பேர் மட்டும் பங்கேற்கும் வண்ணம், சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் அனுமதிக்கப்படும்.

* நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும்.

* விளையாட்டு அரங்கங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில், பார்வையாளர்கள் அனுமதியின்றி விளையாட்டு போட்டிகள் நடைபெற அனுமதிக்கப்படும்.

* நீச்சல் குளங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

* நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

* 31.8.2020 அன்று அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாடு இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும். இருப்பினும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

டாக்சி, ஆட்டோக்களில்...

* நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி சின்னத்திரை மற்றும் திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். இருப்பினும், படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் சின்னத்திரை-திரைபடக் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொண்டு அல்லது தடுப்பூசி போட்டு கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்வதை நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.

* வாடகை மற்றும் டாக்சி வாகனங்களில் டிரைவர் தவிர்த்து 3 பயணிகள் மட்டும் பயணிக்க ஏற்கனவே 1.7.2020 முதல் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கட்டுப்பாடு கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.

* ஆட்டோக்களில் டிரைவர் தவிர்த்து 2 பயணிகள் மட்டும் பயணிக்க ஏற்கனவே 1.7.2020 முதல் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கட்டுப்பாடு கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.

இ-பாஸ் கட்டாயம்

* வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்களை தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் நோய்த்தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கும், கள அளவிலான குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும். அதுபோன்று அனைத்து மாவட்டங்களிலும், கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும்.

நோய்கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள், இந்த பகுதிகளில் இருந்து வெளியில் வராத வகையில், காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களை கொண்டு 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

இந்த பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளித்தல் உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதோடு, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு உதவி புரிய தன்னார்வலர்களும் நியமிக்கப்படுவர்.

முக கவசம் கட்டாயம்

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் நீடிக்கவும், அதனை முழுமையாக தடுக்கவும், பொது மக்கள் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.

பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்தும், முழு ஒத்துழைப்பு நல்கினால்தான், இந்த நோய்த்தொற்று பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.

காய்ச்சல் முகாம்

பல்வேறு தளர்வுகளுக்கு தனித்தனியே வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் தவறாது கடைபிடிப்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்திடவும், வீட்டிற்கு வீடு சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை தினந்தோறும் கண்காணிக்கவும், நோய்த்தொற்று ஏற்பட்டவர்களது தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த பரிசோதனைகள் மேற்கொள்ளவும் காவல், சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி அமைப்புகளின் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் அதை தீவிரமாக கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

கட்டாய தடுப்பூசி

அரசு மருத்துவ நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், அரசு மருத்துவ நிலையங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் 2 வாரத்திற்குள்ளாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

நோய்த்தொற்று அறிகுறி இருந்தால் தாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். இவற்றை கடைப்பிடித்து கொரோனா பரவாமல் இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story