தேர்தல் மோதலில் இருவர் கொலை வேதனையளிக்கிறது; சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட கடும் நடவடிக்கை; போலீஸ் டி.ஜி.பி.க்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


தேர்தல் மோதலில் இருவர் கொலை வேதனையளிக்கிறது; சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட கடும் நடவடிக்கை; போலீஸ் டி.ஜி.பி.க்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 10 April 2021 12:11 AM GMT (Updated: 10 April 2021 12:11 AM GMT)

அரக்கோணம் அருகே தேர்தல் மோதலில் இருவர் கொலை செய்யப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது என்றும், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டிட போலீஸ் டி.ஜி.பி. கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மிகுந்த வேதனை

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் அர்ஜூனன், சூரியா ஆகிய இருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. சட்டமன்றத்தேர்தல் என்பது ஜனநாயகத்தில் நடைபெறும் ஒரு திருவிழா. அதில் அனல் பறக்கும் பிரசாரங்கள் நடைபெறுவதும், ஆக்கப்பூர்வமான முறையில் கருத்து பரிமாற்றங்கள் செய்வதும் மட்டுமே ஜனநாயகத்திற்கும், பொது அமைதிக்கும் வலு சேர்க்கும். இந்த நிகழ்வை பொறுத்தமட்டில் தேர்தல் நேரத்தில் நடைபெற்ற மோதல், இப்போது இருவர் சாதிய வன்மத்துடன் கொலை செய்யப்பட்டுள்ள அவலத்தில் முடிந்திருப்பது கண்டனத்திற்குரியது. கொலை செய்யப்பட்ட இருவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிய அரசு அமையும்...

சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு அமையும் வரை தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கினை நிலைநாட்டுவதற்கு காவல்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எங்கும் யாராலும் பொது அமைதிக்கு பங்கும் விளைந்து, பொதுமக்களின் நிம்மதியை குலைக்கும் நடவடிக்கைகள் அரங்கேற அனுமதிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

எத்தனை கருத்து மோதல்கள் தேர்தல் களத்தில் இருந்தாலும் தேர்தலோடு அவற்றை மறந்துவிட்டு தமிழக மக்கள் அனைவரும் சகோதரர்களாக சமூக நல்லிணக்கத்துடன் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

கடும் நடவடிக்கை

எனவே, தமிழக காவல்துறை தலைவர் (டி.ஜி.பி.) உடனடியாகத் தலையிட்டு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் அவரவர் பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு பணிகளை நிலைநாட்டுவதில் எவ்வித சுணக்கமும் காட்டக் கூடாது என்றும் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்திட வேண்டும் எனவும் அறிவுறுத்திடுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 


Next Story