விதிகளுக்குப் புறம்பாக மாமல்லபுரம் கடற்கரையை ஒட்டி கட்டிடம்: ஓட்டல் நிர்வாகத்துக்கு ரூ.10 கோடி அபராதம் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு


விதிகளுக்குப் புறம்பாக மாமல்லபுரம் கடற்கரையை ஒட்டி கட்டிடம்: ஓட்டல் நிர்வாகத்துக்கு ரூ.10 கோடி அபராதம் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
x
தினத்தந்தி 10 April 2021 1:34 AM GMT (Updated: 10 April 2021 1:34 AM GMT)

விதிகளுக்குப் புறம்பாக மாமல்லபுரம் கடற்கரையை ஒட்டி கட்டிடம் கட்டிய ஓட்டல் நிர்வாகத்துக்கு ரூ.10 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

விதிமீறி கட்டிடம்

சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், மீனவ தந்தை கே.ஆர்.செல்வராஜ்குமார் மீனவர் நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடற்கரையை ஒட்டி ரேடிசன் புளூ ஓட்டல் நிறுவனம் ‘ரிசார்ட்’ கட்டி உள்ளது. கடலோர ஒழுங்குமுறை ஆணைய விதிகள்படி கடற்கரையில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால்தான் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும்.இந்த விதிகளுக்குப் புறம்பாக ஓட்டல் நிர்வாகம் கட்டிடம் கட்டி உள்ளது. எனவே அந்தக் கட்டிடத்தை இடிக்க உத்தரவிட வேண்டும். சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக அபராதம் விதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

விதிகளில் திருத்தம்

இந்த மனு நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால்தாஸ் குப்தா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஸ்டான்லி ஹெப்சன்சிங் ஆஜராகி வாதாடினார்.

மனுவை விசாரித்த ஆணையம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கடற்கரையில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால்தான் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என்ற விதியில் சில மாதங்களுக்கு முன்பு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ரூ.10 கோடி அபராதம்

அதன்படி, கடற்கரையில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தால் 200 மீட்டரில் இருந்து 500 மீட்டர் தொலைவிலான பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்துக்கு கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தில் முறையான அனுமதி பெற வேண்டும்.இந்த வழக்கைப் பொறுத்தவரை, ஓட்டல் நிர்வாகம் கடற்கரையில் இருந்து 200 மீட்டர் தொலைவுக்குள் ஆயிரத்து 100 சதுர மீட்டர் அளவுக்கு கட்டிடம் கட்டி உள்ளது.

இந்த விதிமீறல் கட்டிடத்தை 2 மாதத்துக்குள் இடிக்க வேண்டும். சுற்றுச்சூழல் தாக்கத்துக்காக ஓட்டல் நிர்வாகம் மாநில கடலோர ஒழுங்கு மண்டல ஆணையத்துக்கு ரூ.10 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும்.

மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம்

கடற்கரையில் இருந்து 200 மீட்டர் முதல் 500 மீட்டர் தொலைவுக்குள் கட்டப்பட்டுள்ள கட்டிடத்துக்கு மாநில கடலோர ஒழுங்கு மண்டல ஆணையத்தில் ஓட்டல் நிர்வாகம் 3 மாதத்துக்குள் உரிய அனுமதி பெற வேண்டும்.அவ்வாறு அனுமதி பெறாத பட்சத்தில் அந்தக் கட்டிடத்தையும் இடிக்க வேண்டும். இந்த விதிமீறலை ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு வந்த மனுதாரருக்கு ஓட்டல் நிர்வாகம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 


Next Story