முந்தைய தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 12-ம் வகுப்பு மாணவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்; டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


முந்தைய தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 12-ம் வகுப்பு மாணவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்; டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 April 2021 1:14 AM GMT (Updated: 11 April 2021 1:14 AM GMT)

12-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்துவிட்டு, முந்தைய தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சி.பி.எஸ்.இ. பிடிவாதம்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தலாம் என்று அதிகாரிகள் அறிவித்திருப்பதும், அதற்கான ஏற்பாடுகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதும் அதிர்ச்சி அளிக்கிறது.கொரோனா பரவலால் ஒட்டுமொத்த இந்தியாவும் அச்சத்தில் மூழ்கியுள்ள நிலையில், பொதுத் தேர்வுகளை நடத்துவதில் சி.பி.எஸ்.இ பிடிவாதம் காட்டுவது நியாயமல்ல.

மாணவர்கள் அச்சம்

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை தேர்வுகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்டன. அந்த வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

12-ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு மட்டும் மே மாதம் முதல் வாரத்தில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களும் தேர்வு எழுதும்போது கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எந்த வகையில் நியாயம்?

கொரோனா வைரஸ் 2-வது அலை பரவும் வேகம், முதல் அலையின் வேகத்தைவிட இரு மடங்கு அதிகமாக இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் எடுத்துரைத்து உள்ளனர். 100 பேருக்கும் மேல் ஓரிடத்தில் ஒன்று கூடினால் கொரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளும் ஆபத்து உள்ள நிலையில், தேர்வு மையங்களில் பலநூறு மாணவ மாணவிகளை ஒன்றாக அமரவைத்து தேர்வு எழுத வைப்பது எந்த வகையில் நியாயம்? மாணவர்களுக்கு மட்டும் கொரோனா தொற்றிக் கொள்ளாதா?

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றும் கேந்திரிய வித்யாலயா மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கு முந்தைய தேர்வுகள் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இதேபோன்ற தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

ஆன்லைன் தேர்வு

எனவே, தமிழ்நாடு பாடத்திட்டத்தின் படியான 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்துவிட்டு அதற்கு முந்தைய தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.ஒருவேளை பொதுத் தேர்வுகளை நடத்தியே தீர வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் ஆன்லைன் முறையில் சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளையும் நடத்த சம்பந்தப்பட்ட கல்வி வாரியங்கள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 


Next Story