ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் துறை சார்ந்த தேர்வுகளுக்கான நடைமுறையில் மாற்றம் - டி.என்.பி.எஸ்.சி. தகவல்


ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் துறை சார்ந்த தேர்வுகளுக்கான நடைமுறையில் மாற்றம் - டி.என்.பி.எஸ்.சி. தகவல்
x
தினத்தந்தி 11 April 2021 2:23 AM GMT (Updated: 11 April 2021 2:23 AM GMT)

ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படும் துறை சார்ந்த தேர்வுகளுக்கான நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

சென்னை, 

இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

துறை சார்ந்த தேர்வுகள் ஆண்டுக்கு 2 முறை, அதாவது மே மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த தேர்வுகளின் நடைமுறையினை சீரமைக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (டி.என்.பி.எஸ்.சி.) ஜூன் 2021-ல் நடைபெற இருக்கும் துறைத் தேர்வுகளில் கணினி வழித் தேர்வினை அறிமுகம் செய்கிறது.

அதற்கான திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம், தேர்வு முறை www.tnpsc.gov.inஎன்ற தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கொள்குறிவகை தேர்வுகளுக்கான துறைத் தேர்வுகள் கணினி வழித் தேர்வாக நடைபெறும். விரிந்துரைக்கும் வகையிலான துறைத் தேர்வுகளை பொறுத்தமட்டில் தற்போதுள்ள நடைமுறையான எழுத்துத் தேர்வு வகையிலேயே தொடரும்.

கணினி வழித் தேர்வுகள் வருகிற ஜூன் மாதம் 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெறும். விரிந்துரைக்கும் வகையிலான எழுத்துத் தேர்வு 27-ந் தேதியில் இருந்து நடைபெறும். கொள்குறி வகை மற்றும் விரிந்துரைக்கும் வகை எழுத்து தேர்வுகளை ஒருங்கிணைத்து எழுதவிருக்கும் தேர்வர்கள் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இருவேறு தினங்களில் எழுத வேண்டும். இந்த தேர்வை எழுத இருக்கும் தேர்வர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தினை தொடர்ந்து கண்காணிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாற்ய் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story