கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை; கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு


கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை; கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 11 April 2021 11:24 PM GMT (Updated: 11 April 2021 11:24 PM GMT)

கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். அதைத் தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளது.

கொரோனாவின் 2-வது அலை
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை வீசத் தொடங்கியுள்ளது. முதல் அலையை விடவும் 2-வது அலை காட்டுத் தீ போல வேகமாக பரவி வருகிறது. ஆனாலும்கூட, சிலர் எந்த கவலையும் இன்றி அரசு உத்தரவுகளை மதிக்காமல், கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்காமல் அலட்சியம் காட்டி வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 6 ஆயிரத்து 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 2 ஆயிரத்து 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அபராதம்
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஊரடங்கை வருகிற 30-ந் தேதி வரையிலும் நீட்டித்ததோடு, பல்வேறு கட்டுப்பாடுகளையும் அரசு பிறப்பித்தது. அதன்படி, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்து வருவதற்கு இ-பாஸ் கட்டாயம். பஸ் பயணங்களில் நின்றுகொண்டு செல்ல அனுமதி இல்லை. மத வழிபாட்டு தலங்கள் இரவு 10 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். திரையரங்குகள், ஓட்டல்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே அமர அனுமதி என பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மற்றும் பொது இடங்களில் எச்சில் உமிழ்பவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கிடையே தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.

இட நெருக்கடி
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை எழுச்சியடைந்து வருவதால் பெரும்பாலான அரசு ஆஸ்பத்திரிகளில் இட நெருக்கடி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை அளிக்க தேவையான இடவசதிகளை ஏற்படுத்தும் முனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். பள்ளிகள், கல்லூரிகள் உள்பட கல்வி நிலையங்களின் வளாகங்களை மீண்டும் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றும் பணிகளும் வேகமாக நடக்கின்றன.அந்த வகையில், சென்னையில் பாதிப்பு மோசமாக உள்ளதால் மாநில கல்லூரி விடுதி, அண்ணா பல்கலைக்கழகம், பாரிமுனையில் உள்ள பாரதி கல்லூரி உள்பட பல்வேறு கல்வி நிறுவன வளாகங்கள் கொரோனா தொற்று உள்ளவர்கள் சிகிச்சை பெறும் வகையில் வார்டுகளாக மாற்றப்பட உள்ளன.

முதல்-அமைச்சர்அவசர ஆலோசனை
இந்த பரபரப்பான சூழ்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், மூத்த அமைச்சர்கள், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

தமிழகத்தில் கடந்த 6-ந் தேதி சட்டசபை தேர்தல் முடிந்து, அதன் முடிவுகள் அடுத்த மாதம் 2-ந் தேதி அறிவிக்கப்பட உள்ளன. தற்போது ‘காபந்து சர்க்கார்' (முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமையும் வரையிலும் தற்காலிகமாக பொறுப்பில் இருக்கும் அரசு) ஆட்சியில் இருக்கிறது. இதனால் முதல்-அமைச்சர் எந்தவிதமான முக்கிய முடிவுகளையும் எடுக்க முடியாது. இருப்பினும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேர்தல் நடத்தை விதிகளில் தேர்தல் ஆணையம் சில தளர்வுகளை கொண்டுவந்துள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகள்
தற்போதைய தடுப்பு நடவடிக்கைகள் கொரோனாவின் கொட்டத்தை அடக்குவதற்கு பலன் அளிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அந்தவகையில், இன்றைய கூட்டத்தில் விவாதித்து, இரவு நேர ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Next Story