‘பா.ஜனதா கட்சி போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும்’; எல்.முருகன் பேட்டி


‘பா.ஜனதா கட்சி போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும்’; எல்.முருகன் பேட்டி
x
தினத்தந்தி 12 April 2021 2:32 AM GMT (Updated: 12 April 2021 2:32 AM GMT)

தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் எல்.முருகன் ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக ஆந்திர மாநிலம் சென்றார்.

அப்போது ஆந்திராவை ஒட்டியுள்ள தமிழக எல்லைக்குட்பட்ட திருவள்ளூரை அடுத்த பட்டரைப்பெருமந்தூர் அருகே சென்ற போது சுங்கச்சாவடி பகுதியில் இறங்கி இளநீர் அருந்தினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரக்கோணத்தில் தேர்தல் விரோதம் சம்பந்தமாக 2 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடக்க கூடாத சம்பவமாகும். இது தொடர்பாக தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று உறுதியாக ஆட்சி அமைக்கும். தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என அவர் தெரிவித்தார்.


Next Story