3 மாத கர்ப்பிணி துப்பாக்கியால் சுட்டுக்கொலை தந்தை வெறிச்செயல்


3 மாத கர்ப்பிணி துப்பாக்கியால் சுட்டுக்கொலை தந்தை வெறிச்செயல்
x
தினத்தந்தி 14 April 2021 10:10 PM GMT (Updated: 14 April 2021 10:10 PM GMT)

3 மாத கர்ப்பிணியை அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகுன்டா மாதையன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 60). இவரது மனைவி மாதேவி. இவர்களது மகள் வெங்கடலட்சுமி (21). இவருக்கும், கர்நாடக மாநிலம் மாலூரை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. வெங்கடலட்சுமி தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் யுகாதி பண்டிகை விருந்துக்காக வெங்கடலட்சுமி, தனது கணவர் சீனிவாசனுடன் நேற்று பெற்றோர் வீட்டுக்கு வந்தார். பின்னர் சீனிவாசன் வெளியே சென்று விட்டார். அந்த நேரத்தில் மதுபோதையில் வீட்டுக்கு வந்த அருணாச்சலம், தனது மனைவி மாதேவியுடன் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர் மனைவியை தான் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் சுட முயன்றார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வெங்கடலட்சுமி தனது தாயை காப்பாற்ற குறுக்கே சென்றார். அப்போது அருணாச்சலம் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் வெங்கடலட்சுமி உடலில் குண்டுகள் பாய்ந்தன. இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அங்கிருந்து அருணாச்சலம் தப்பி ஓடிவிட்டார்.

துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு, கிராம மக்கள், அருணாச்சலம் வீட்டின் முன்பு குவிந்தனர். அப்போது அங்கு குண்டுஅடிப்பட்டு வெங்கடலட்சுமி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தளி போலீசார் வெங்கடலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அருணாச்சலத்தை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story