தாறுமாறாக ஓடிய கார் மோதி தந்தை-மகன் உள்பட 3 பேர் பலி


தாறுமாறாக ஓடிய கார் மோதி தந்தை-மகன் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 18 April 2021 1:29 AM GMT (Updated: 18 April 2021 1:29 AM GMT)

தாறுமாறாக ஓடிய கார் மோதி தந்தை-மகன் உள்பட 3 பேர் பலி சாலையோரம் நின்றவர்களுக்கு நேர்ந்த துயரம்.

சிவகங்கை, 

தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் சாலையோரம் நின்றிருந்த தந்தை-மகன் உள்பட 3 பேர் பலியானார்கள். சிவகங்கை மாவட்டம், கச்சாத்தநல்லூரை சேர்ந்தவர் முருகன்(வயது 45). இவரது மகன் வீரகெவின் பிரகாஷ்(22). அதே ஊரை சேர்ந்தவர் தாமோதரன்(26). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவில் கச்சாத்தநல்லூர் கிராமத்தின் சாலையோரம் டீக்கடை அருகே நின்று கொண்டு இருந்தனர்.

அப்போது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து அந்த வழியாக தறிகெட்டு ஒடியபடி வந்த கார், சாலையோரம் நின்று கொண்டிருந்த 3 பேர் மீதும் பயங்கரமாக மோதியது. சம்பவ இடத்திலேயே முருகனும், தாமோதரனும் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் சாலையோரம் பள்ளத்தில் பாய்ந்து நின்றது. உடனே காரை ஓட்டிய நபர், தப்பி ஓடி விட்டார்.

உயிருக்கு போராடிய வீரகெவின் பிரகாசை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவரும் பரிதாபமாக இறந்தார்.

ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பேர் பலியானதால் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்தது. போலீஸ் விசாரணையில், காரை ஓட்டியவர் ராமநாதபுரம் மாவட்டம் கீழப்பெருங்கரை கிராமத்தை சேர்ந்த மாப்பிள்ளைதுறை மகன் பிரசாத் என்ற பிரகாசம் (22) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இவர் அன்றைய பரமக்குடியில் இருந்து கீழப்பெருங்கரைக்கு காரில் வந்த போது, பரமக்குடியில் ஒரு பெண் மீது மோதியதாகவும், வைகை நகர் பகுதியில் பசுமாடுகள் மீது மோதியதாகவும் புகார் எழுந்து உள்ளது. அதன்பிறகே சாலையோரம் நின்றிருந்த 3 பேர் மீது மோதிய சம்பவம் நடந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story