இரவு நேர ஊரடங்கு..? - புதிய கட்டுப்பாடுகள் வெளியாக வாய்ப்பு: முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
கொரோனா பாதிப்பு காரணமாக புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாகவும், இரவு நேரத்தில் ஊரடங்கை செயல்படுத்துவது குறித்தும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டார். எனினும் அந்த கூட்டத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் இருந்து சென்னை வருகிறார். தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக அவர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சில அதிகாரிகள் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பின் இரவு நேர ஊரடங்கு தொடர்பாகவும், புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக கொரோனா தொற்று பரவி வரும் ஒரு சில மாநிலங்களில் இரவு மற்றும் வார இறுதிநாட்கள் ஊரடங்கு விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story