காதல் விவகாரத்தில் டி.வி. நடிகையுடன் தகராறு; உதவி இயக்குனர் உள்பட 3 பேர் கைது


காதல் விவகாரத்தில் டி.வி. நடிகையுடன் தகராறு; உதவி இயக்குனர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 19 April 2021 10:19 PM GMT (Updated: 19 April 2021 10:19 PM GMT)

காதல் விவகாரம் தொடர்பாக டி.வி. நடிகையுடன் தகராறு செய்த உதவி இயக்குனர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவொற்றியூர், 

சென்னை மணலி, பல்ஜிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 24) டெலிவிஷன் நடிகை. பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு 2019-ம் ஆண்டு சரவணன் என்பவருடன் திருமணமானது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இவர்களது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

இதற்கிடையில் தான் நடித்து வரும் தொலைக்காட்சி தொடரில் உதவி இயக்குனராக பணிபுரியும் நவீன்குமார் (25) என்பவருடன் ஜெனிபருக்கு பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியதாக தெரிகிறது. இருவரும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் ஜெனிபருக்கு ஏற்கனவே திருமணமான விஷயம் தற்போதுதான் நவீன்குமாருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இது தொடர்பாக நடிகை ஜெனிபரிடம் கேட்டார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் ஜெனிபர் வீட்டுக்கு சமாதானம் பேச நவீன்குமார் சென்றார். அப்போதும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு வந்த ஜெனிபரின் தந்தை பெரியநாயகம், அவருடைய இளைய மகன் சேவியர் இருவரும் நவீன்குமாரை கண்டித்ததுடன், அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நவீன்குமார், ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நவீன்குமாரின் தந்தை உதயகுமார், தாய் மற்றும் உறவினர்கள் ஜெனிபரின் வீட்டுக்கு சென்று அவருடைய தந்தை பெரியநாயகத்திடம் சண்டையிட்டனர். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் பெரியநாயகம் காயமடைந்தார். மேலும் அவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள்களும் கல்லால் அடித்து நொறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் உதயகுமாரின் கார் கண்ணாடியும் உடைந்து சேதமானது.

இதுகுறித்த புகாரின்பேரில் மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி இயக்குனர் நவீன்குமார் மற்றும் அவருடைய நண்பர்களான பாண்டியன் (24), கார்த்திக் (27) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story