பறிமுதல் செய்த லாரிகளை விடுவிக்க கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது


பறிமுதல் செய்த லாரிகளை விடுவிக்க கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
x
தினத்தந்தி 20 April 2021 10:03 PM GMT (Updated: 20 April 2021 10:03 PM GMT)

பறிமுதல் செய்த லாரிகளை விடுவிக்க கல்குவாரி உரிமையாளரிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் ராம்நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு சொந்தமான கல்குவாரி கோனேரிபாளையம் அருகே உள்ளது. கடந்த 18-ந்தேதி செந்தில்குமாரின் கல்குவாரியில் இருந்து கற்களை (புளுமெட்டல்) ஏற்றிக்கொண்டு 2 லாரிகள் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் சென்றன. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார், அந்த லாரிகளை மறித்து சோதனையிட்டார்.

இதையடுத்து அதிக பாரம் ஏற்றிச்சென்றதாக 2 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு, சுரங்கம் மற்றும் கனிம வளங்களை அதிகப்படியாக எடுத்துச்செல்லும் சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

லஞ்சம் கேட்டார்

இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை விடுவிக்கவும், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காகவும், பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் (வயது 48), செந்தில்குமாரிடம் ரூ.1 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார். அதற்கு உடன்பட மறுத்த செந்தில்குமாரிடம் ரூ.50 ஆயிரம் வரை பேரம் பேசியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத செந்தில்குமார், பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசில் புகார் கொடுத்தார்.

கைது

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி, செந்தில்குமாரின் குவாரியில் பணிபுரியும் ஊழியர் ஜார்ஜ்பெர்னான்டஸ், நேற்று காலை பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ரூ.50 ஆயிரத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜிடம் கொடுத்தார்.

அதை அவர் பெற்றபோது, வெளியே காத்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் பால்ராஜை கையும், களவுமாக கைது செய்து, ரூ.50 ஆயிரத்தை கைப்பற்றினர்.

மேலும் பெரம்பலூர் டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணனை வரவழைத்து, இந்த வழக்கில் அவருக்கு தொடர்புள்ளதா? என்பது குறித்து அவரிடமும், போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள் உள்பட அனைவரிடமும் விசாரணை நடத்தினர். 

Next Story