மக்கள் நீதி மய்யத்தில் இருந்து கமீலா நாசர் ‘திடீர்' ராஜினாமா


மக்கள் நீதி மய்யத்தில் இருந்து கமீலா நாசர் ‘திடீர் ராஜினாமா
x
தினத்தந்தி 21 April 2021 9:57 PM GMT (Updated: 21 April 2021 9:57 PM GMT)

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து கமீலா நாசர் ‘திடீர்' ராஜினாமா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் அதிருப்தி.

சென்னை, 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மண்டல மாநில செயலாளராக இருந்தவர் கமீலா நாசர். இவர் பிரபல நடிகர் நாசரின் மனைவி். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சென்னை மத்திய தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமீலா நாசர் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சென்னையில் உள்ள ஒரு சில தொகுதிகளில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு கொடுத்திருந்தார். ஆனால் அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதனால் கமீலா நாசர் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் ராஜினாமா செய்வதாக சில தினங்களுக்கு முன்பு கட்சிக்கு அவர் கடிதம் அனுப்பியிருந்தார்.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கட்சியின் மாநில செயலாளர் சென்னை மண்டலம் (கட்டமைப்பு) பதவி வகித்து வந்த கமீலா நாசர் தனிப்பட்ட காரணங்களால் கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கமீலா நாசர் கட்சி பதவியை திடீரென ராஜினாமா செய்திருப்பது மக்கள் நீதி மய்யம் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story