பாளையங்கோட்டை சிறையில் கைதிகள் திடீர் மோதல்; வாலிபர் சாவு
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் திடீரென்று மோதிக் கொண்டனர். இதில் வாலிபர் உயிரிழந்தார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள வாகைகுளத்தைச் சேர்ந்தவர் பாபநாசம். இவருடைய மகன் முத்து மனோ (வயது 27). இவர் மீது மூன்றடைப்பு, களக்காடு ஆகிய போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு களக்காடு போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு சம்பந்தமாக முத்து மனோ கைது செய்யப்பட்டார். அவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
கைதிகள் திடீர் மோதல்
இந்த நிலையில் முத்து மனோவை ஸ்ரீவைகுண்டம் சிறையில் இருந்து பாளையங்கோட்டை சிறைக்கு நேற்று சிறைத்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்தனர். பாளையங்கோட்டை சிறையில் வைத்து முத்துமனோவுக்கும், சில கைதிகளுக்கும் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டு மோதல் உருவானது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதை பார்த்த அங்கு இருந்த போலீசார், கைதிகளை அவரவர் அறைகளில் அடைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்த முத்து மனோவை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இரவில் முத்து மனோ பரிதாபமாக இறந்தார்.
Related Tags :
Next Story