தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்; தியேட்டர்கள், வணிக வளாகங்கள் இயங்க தடை; சலூன்கள், ‘பார்’களையும் மூட உத்தரவு


தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்; தியேட்டர்கள், வணிக வளாகங்கள் இயங்க தடை; சலூன்கள், ‘பார்’களையும் மூட உத்தரவு
x
தினத்தந்தி 24 April 2021 7:24 PM GMT (Updated: 24 April 2021 7:24 PM GMT)

கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில் தமிழக அரசு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தியேட்டர்கள், வணிக வளாகங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவியது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பிரதமர் ஆலோசனை
கொரோனா பரவலில் 2-வது அலைகடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதை தடுக்க தமிழக அரசு ஏற்கனவே சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் தற்போது அமலில் உள்ளன. ஆனாலும் தொற்றின் எண்ணிக்கை குறையவில்லை.இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழகத்தில் கொரோனா பரவல் நிலை குறித்து எடுத்துரைத்தார்.

பரவல் நீடிப்பதால்
இந்த நிலையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தற்போதுள்ள 
நோய் பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம், பக்கத்து மற்றும் இதர வெளிமாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கொரோனா தொற்றை தடுப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும், கட்டுப்பாடுகளுடனும், 30-4-2021 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.மேலும், நோய்த்தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகள் தொடர்ந்து அமலில் இருக்க ஆணையிடப்பட்டு உள்ளது.

தொற்று பரவ காரணம் யார்?
இந்தியாவில் மராட்டியம், பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, சத்தீஷ்கார் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில், கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதேபோன்று தமிழ்நாட்டிலும் சில மாவட்டங்களில் நிகழ்ச்சிகள், விழாக்கள், கூட்டங்கள் போன்ற காரணங்களினாலும், பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவதை தவிர்ப்பதாலும், பணியிடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற தவறுவதாலும் சமீப காலத்தில் கொரோனா நோய்த்தொற்று நாள்தோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 28-3-2021 அன்று 13 ஆயிரத்து 70 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 23-4-2021 அன்று கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 95 ஆயிரத்து 48 ஆக உயர்ந்துள்ளது.

தியேட்டர்களை மூட உத்தரவு
கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவது வருத்தம் அளிக்கிறது. நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதையும், பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணி முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதன்படி,* அனைத்து சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள் (பார்), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை.

வணிக வளாகங்கள் அடைப்பு

* பெரிய கடைகள், வணிக வளாகங்கள் (ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், மால்கள்) இயங்க அனுமதி இல்லை. மளிகை, காய்கறிகடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் உரிய வழிமுறைகளை பின்பற்றி வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.எனினும், வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் அனுமதி இல்லை. தனியாக செயல்படுகின்ற மளிகை உள்பட பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை 
செய்யும் பெரிய கடைகள் (டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ்) குளிர்சாதன வசதியின்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில் ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

சலூன்கள்

* சென்னை மாநகராட்சி உள்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை.

* அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் (ரெஸ்டாரண்ட்ஸ், ஓட்டல், மெஸ்) பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் (ஓட்டல், லாட்ஜ்) தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக்கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.

* அனைத்து மின் வணிக சேவைகள் (இ-காமர்ஸ்) வரையறுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.

கோவில்களில் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை

* கோவில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. எனினும், தினமும் நடைபெறும் பூஜைகள், பிரார்த்தனைகள், சடங்குகளை, வழிபாட்டுத்தல ஊழியர்கள் மூலம் நடத்துவதற்கு தடையில்லை.

* கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு 10-ந் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், குடமுழுக்கு, திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் அல்லது இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்து முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ, 50 பேர் பங்கேற்புடன் நடத்திட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தற்போது, இந்த நடைமுறை மாற்றப்பட்டு, பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல், கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. புதிதாக குடமுழுக்கு, திருவிழா நடத்த அனுமதி இல்லை.

திருமணம், இறுதிச்சடங்கு

* திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக்கூடாது.

* இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் 25 நபர்களுக்கு மேல் பங்கேற்கக்கூடாது.

* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் (ஐ.டி, ஐ.டி.இ.எஸ்.) குறைந்தபட்சம் 50 சதவீத பணியாளர்கள் கண்டிப்பாக வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும்.

இ-பாஸ்

* கோல்ப், டென்னிஸ் கிளப் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம், குழுமங்கள் (அகாடமி) செயல்பட அனுமதி இல்லை. எனினும், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கான பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.

* புதுச்சேரி தவிர்த்து, ஆந்திரபிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்கள் http://eregister.tnega.org என்ற வலைதளத்தில் பதிவு செய்த (இ-ரிஜிஸ்ட்ரேஷன்) விவரத்தை தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.

* வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு விமானம், கப்பல் மூலம் வரும் பயணியர் அனைவரும் http://eregister.tnega.org என்ற வலைதளத்தில் பதிவு செய்த விவரத்தை தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.

உரிய நடவடிக்கை

* ஏற்கனவே ஆணையிடப்பட்டபடி, தனியார் மற்றும் அரசு பஸ்களில் இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பஸ்களில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.

* வாடகை மற்றும் டாக்சிகளில், டிரைவர் தவிர்த்து 3 பயணிகள் மட்டும் பயணிக்கவும், ஆட்டோக்களில் டிரைவர் தவிர்த்து 2 பயணிகள் மட்டும் பயணிக்கவும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு உள்ளது. 

இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இரவு நேர ஊரடங்கு தொடரும்

* தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.

* தொழில் நிறுவனங்களுக்கான கொரோனா பொதுமுடக்க கால செயல்பாடுகள் தொடர்பாக, தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவின்படி வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் எவ்வித மாறுதல் இன்றி தொடர்கின்றன.

* பணிக்கு செல்லும் பணியாளர்கள், பணிக்கு சென்று வருகையில் தங்கள் நிறுவனம் வழங்கியுள்ள அடையாள அட்டையை தவறாமல் அணிந்து செல்ல வேண்டும்.

பொது மக்கள் ஒத்துழைப்பு

அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியும்.
மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெற வேண்டும். பொது மக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கில் எந்தெந்த பணிகளுக்கு அனுமதி?

பத்திரிகை, பால் வினியோகம் இன்று வழக்கம் போல் நடைபெறும்

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இன்று அமலில் இருக்கும் முழு ஊரடங்கில் அரசு விலக்கு அளித்துள்ள பணிகள் விவரம் வருமாறு:-

* பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம் வழக்கம் போல் நடைபெறலாம்.

* ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் வழக்கம் போல் பணியாற்றலாம்.

* மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருத்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் நடைபெறலாம்.

* அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளைப் பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்கள், பெட்ரோல்-டீசல், எல்.பி.ஜி. கியாஸ் போன்ற எரிபொருளை எடுத்து செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.

* தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படலாம்.

* ஓட்டல்களில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கும் இந்த நேர கட்டுப்பாடு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story