புதிய கல்வி கொள்கை மொழிபெயர்ப்பில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழை புறக்கணிப்பதா? மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்


புதிய கல்வி கொள்கை மொழிபெயர்ப்பில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழை புறக்கணிப்பதா? மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
x
தினத்தந்தி 25 April 2021 5:55 AM GMT (Updated: 25 April 2021 5:55 AM GMT)

‘புதிய கல்வி கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழை புறக்கணிப்பதா?’, என மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, 

மாநில அரசின் கல்வி உரிமைகளை முழுமையாக பறித்து, மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை உருவாக்கும் சமவாய்ப்பற்ற புதிய கல்விக்கொள்கை குறித்து கல்வியாளர்கள் எதிர்ப்பும், எச்சரிக்கையும் தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்களின் எதிர்கால நலனுக்கு எதிரான இந்த புதிய கல்விக்கொள்கை இந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்துக்கும் வழிவகுப்பதால், இக்கொள்கையை தொடக்கத்தில் இருந்தே தி.மு.க. எதிர்த்து வந்துள்ளது.

தமிழ்மொழி புறக்கணிப்பு

இந்திய அரசியல் சட்டத்துக்கு முரணாகவும், பன்முகத்தன்மைக்கு எதிராகவும் உள்ள புதிய கல்விக்கொள்கையை வலுக்கட்டாயமாக நிறைவேற்ற துடிக்கும் மத்திய பா.ஜ.க அரசு, அக்கொள்கையின் மொழிபெயர்ப்பை வெளியிடுவதிலேயே மொழி ஆதிக்கத்தையும், பாகுபாட்டையும் அப்பட்டமாக வெளிப்படுத்தி உள்ளது.

8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளில் மூத்த மொழியாகவும், செம்மொழியாகவும் உள்ள தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு உள்ளது. உருது உள்ளிட்ட அட்டவணையில் உள்ள மேலும் சில மொழிகளும் இடம்பெறவில்லை.

மாற்றாந்தாய் மனப்போக்கு

புதிய கல்விக்கொள்கை பற்றிய அறிவிப்பிலேயே தமிழை புறக்கணித்து மாற்றாந்தாய் மனப்போக்கை வெளிப்படுத்தியுள்ள மத்திய பா.ஜ.க அரசை கண்டிப்பதுடன், மாநில உரிமை, மொழி உணர்வு, மாணவர் எதிர்காலம் இவற்றுக்கு எதிராக உள்ள புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பில் தி.மு.க. உறுதியாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story