இன்று முதல் தமிழகத்தில் வங்கிகளின் வேலை நேரம் குறைப்பு


இன்று முதல் தமிழகத்தில் வங்கிகளின் வேலை நேரம் குறைப்பு
x
தினத்தந்தி 26 April 2021 2:13 AM GMT (Updated: 26 April 2021 2:13 AM GMT)

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக வங்கிகளின் வேலை நேரம் இன்றுமுதல் குறைக்கப்படுகிறது. அதன்படி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என்று வங்கியாளர் குழுமம் உத்தரவிட்டுள்ளது

சென்னை, 

கொரோனாவின் 2-வது அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வங்கிகளின் வேலை நேரம் குறைக்கப்படுகிறது. இந்த வழிகாட்டு நெறிமுறைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை அமலில் இருக்கும். அதன்பின், நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாற்றி அமைக்கப்படும்.

இதன்படி வங்கிகளின் மண்டல அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள் மற்றும் வங்கிக்கிளைகள், காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.

வீட்டில் இருந்து பணி

வேலை நேரத்தின்போது, வாடிக்கையாளர்களுடன் வங்கி அதிகாரிகள் நேரடி தொடர்பு கொள்ளக்கூடாது. கர்ப்பிணிகள், பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஊழியர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதியுடன் வீட்டில் இருந்து பணி புரியலாம்.

ஆதார் பதிவு மையங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகம் உள்ள வங்கிக்கிளைகளை கையாள போலீஸ் உதவியை நாடலாம்.

கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் வங்கிகள் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி செயல்படலாம்.

ஏ.டி.எம். எந்திரங்கள்

ஏ.டி.எம். மற்றும் பணம் மறுசுழற்சி எந்திரங்கள் தடையில்லாமல் செயல்படுவதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.

வங்கிகளின் வணிக பிரதிநிதிகள் சேவை அனைத்து நேரங்களிலும் கண்டிப்பாக செயல்பட வேண்டும். தகுதி உள்ள அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், கொரோனா தடுப்பூசி போடுவதை வங்கிகள் ஊக்கப்படுத்த வேண்டும்.

வழிகாட்டு நெறிமுறைகள்

கொரோனா தொடர்பான, முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளி பின்பற்றுதல் உட்பட அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். வங்கிக்கு வாடிக்கையாளர்கள் நேரடியாக வருவது தவிர்க்க அறிவுரை கூற வேண்டும். வங்கி சேவை தளத்தை பயன்படுத்த வங்கிகள் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு தமிழக மாநில வங்கியாளர்கள் குழும பொது மேலாளர் எஸ்.சி.மோகன்தா, உறுப்பினர்கள், வங்கிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளார்.

Next Story