ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை தமிழகத்தின் தேவைக்கு முழுமையாக வழங்க வேண்டும்; மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை தமிழகத்தின் தேவைக்கு முழுமையாக வழங்க வேண்டும்; மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 April 2021 6:01 PM GMT (Updated: 27 April 2021 6:01 PM GMT)

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை தமிழகத்தின் தேவைக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தற்காலிக அனுமதி

தமிழக காபந்து அரசின் சார்பில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க., கொரோனா 2-வது அலை பரவலின் வேகமும், அது ஏற்படுத்தும் விபரீத தாக்கமும் பொதுமக்களைக் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியுள்ள நிலையில், மருத்துவ ஆக்சிஜனின் தேவையை உணர்ந்து, மனிதாபிமான அடிப்படையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு மட்டுமே தற்காலிக அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியது. வேறு எந்த நோக்கத்திலும் ஆலை செயல்பட அனுமதிக்கக் கூடாது என்பதும், உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழ்நாட்டின் தேவைக்கு முழுமையாக பயன்படுத்தப்பட்டு, அதன்பிறகே பிற மாநிலங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் முன்வைக்கப்பட்டது.

தி.மு.க. வலியுறுத்தல்

ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செயல்பாட்டைத் தவிர வேறு எந்த பணியும் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதையும் உறுதி செய்ய தமிழக அரசு நிர்வாகத்துடன் தூத்துக்குடி பொதுமக்கள், சூழலியல் செயல்பாட்டாளர்கள், போராட்ட அமைப்பினர் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும் என்பதையும் தி.மு.க. வலியுறுத்தியது. இவற்றைத் தமிழக காபந்து அரசு ஏற்றுக்கொண்டது.

கொரோனா பரவல் கடுமையாக உள்ள நிலையில், புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை உருவாக்குவதில் கால தாமதம் ஏற்படும் என்கிற மருத்துவத்துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்தை கவனத்தில் கொண்டு, ஸ்டெர்லைட் ஆலைக்கு 4 மாத காலத்திற்கான தற்காலிக அனுமதி வழங்கிட நிபந்தனைகளுடன் ஒப்புக்கொண்டது தி.மு.க.

மறு உருவாக்கம்

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் வேறு எந்தெந்த வகையில் விரைவாக ஆக்சிஜன் உற்பத்தியைப் பெருக்க முடியும் என்ற அடிப்படையில் திருச்சி “பெல்” நிறுவனத்தில் முடங்கியுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை விரைந்து மறு உருவாக்கம் செய்யவேண்டும் என தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா எம்.பி. மத்திய கனரக தொழில்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார்.

மக்களின் உயிர் காக்க எந்தெந்த வகையில், தமிழ்நாட்டின் மருத்துவ தேவைக்கான ஆக்சிஜனை விரைந்து பெற முடியுமோ அதற்கான முயற்சிகளையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது தி.மு.க.

ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும்

அதனடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலையிலும் ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தியது. தமிழக அரசு மற்றும் குழுவினரின் முழு கண்காணிப்பில் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நடைபெறவேண்டும் என தீர்மானிக்கப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையில், ஸ்டெர்லைட்டில் வேதாந்தா நிறுவனம் ஆக்சிஜனை தயாரித்து, அது மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் மத்திய அரசு மாநிலங்களின் தேவைக்கேற்ப ஆக்சிஜனை பிரித்து வழங்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக அனைத்து கட்சிகள் முன்வைத்த நிபந்தனையின் அடிப்படையிலான அரசின் தீர்மானத்தை சுப்ரீம் கோர்ட்டில் உரிய முறையில் எடுத்துரைக்க, தமிழக காபந்து அரசு தவறிவிட்டதன் விளைவு இது.

சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், ஆக்சிஜன் தேவை இனிவரும் நாட்களில் அதிகரிக்கும். எனவே, தமிழகத்தின் முழுத்தேவையை நிறைவேற்றிய பிறகு, மீதமுள்ள ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அளித்திடுவதே சரியான வழிமுறையாகும்.

அநீதி இழைத்திடக்கூடாது

ஆக்சிஜனை பங்கிடும் பொறுப்பை மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு வழங்கியிருப்பதால், பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக இதில் கவனம் செலுத்தி, ஸ்டெர்லைட்டில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தமிழகத்தின் முழு தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கும் பொறுப்பினை மேற்கொள்ள வேண்டும்.

இதுகுறித்து, பிரதமர் அலுவலகம் உடனடியாக தமிழக காபந்து அரசின் அதிகாரிகளுக்கும் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். பேரிடர் நேரத்தில் தமிழ்நாட்டுக்கு எவ்வகையிலும் அநீதி இழைத்திடக்கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்.

“சீல்” வைக்கப்படும்

ஸ்டெர்லைட் ஆலை தற்காலிக அனுமதியுடன், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வேறு எவ்வகையான செயல்பாட்டுக்காகவும் அல்ல. தி.மு.க. அரசு அமைந்ததும், தற்காலிக அனுமதிக்காலம் முடிந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக “சீல்” வைக்கப்படும் என்ற உறுதியினை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 


Next Story