கொரோனாவால் இறந்த பெண்ணின் உடலை ஒப்படைக்க ரூ.19 ஆயிரம் லஞ்சம் கேட்ட சுகாதார ஆய்வாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்


கொரோனாவால் இறந்த பெண்ணின் உடலை ஒப்படைக்க ரூ.19 ஆயிரம் லஞ்சம் கேட்ட சுகாதார ஆய்வாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 29 April 2021 12:25 AM GMT (Updated: 29 April 2021 12:25 AM GMT)

கொரோனாவால் இறந்த பெண்ணின் உடலை ஒப்படைக்க ரூ.19 ஆயிரம் லஞ்சம் கேட்ட சுகாதார ஆய்வாளர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் பொது சுகாதாரத்துறை நடவடிக்கை.

சென்னை, 

சென்னை, அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (வயது 57). இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சாந்தி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கும் போது, கையொப்பம் இட சுகாதாரத்துறை அலுவலர்கள் கூறியுள்ளனர். அப்போது ஆம்புலன்ஸ் மற்றும் இதர ஏற்பாடுகளுக்காக சுகாதார ஆய்வாளர் தசரதன் என்பவர் ரூ.19 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது.

அப்போது பெண்ணின் உறவினர்கள் கையில் பணம் இல்லை என்று கூறியுள்ளனர். பணம் கொடுக்காததால் உடலை வழங்காமல் அங்கும், இங்குமாக சுகாதார அலுவலர்கள் அலைக்கழித்துள்ளனர்.இதற்கிடையில் பணபரிமாற்ற செயலி மூலம் முன்பணமாக ரூ.10 ஆயிரம் அனுப்பும் படி சுகாதார அலுவலர்கள் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களுக்கிடையே ஆஸ்பத்திரி வளாகத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் நடந்த சம்பவம் குறித்து ஓமந்தூரார் மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தியிடம் கூறியுள்ளனர். இதையடுத்து விசாரணை மேற்கொண்டு உடலை உறவினர்களிடம் இறுதிச்சடங்கிற்கு ஒப்படைக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சுகாதார ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தார். இந்நிலையில், மாங்காடு சுகாதார ஆய்வாளர்கள் சுந்தரேசபெருமாள் மற்றும் தசரதன் ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து பொதுசுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story